2015 ஜனவரியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னரும்கூட அரச ஏற்பாட்டிலான தமிழ் மக்களுக்கு எதிரான கடத்தல்கள், சித்திரவதைகள், கப்பம் மற்றும் பாலியல் வன்புணர்வுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
அத்துடன் பிரிட்டன் பிரதமர் இலங்கை வந்தபோது காணாமல் போகச் செய்யப்பட்டவர்களை மீட்டுத் தருமாறு ஆர்ப்பாட்டம் செய்தவர்களும் கடத்தப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். – இவ்வாறு ‘உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச திட்டம்’ அமைப்பு ‘இன்னமும் முடிவுறுத்தப்படாத யுத்தம்: இலங்கையின் சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைகளிலிருந்து தப்பிப் பிழைத்தவர்கள் 2009 – 2015’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. 155 பேரின் சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு 125 பக்கங்கள் கொண்டதாக வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு: இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து 6 ஆண்டுகள் நிறைவடைந்த போதிலும் தமிழ் மக்கள் திட்டமிடப்பட்ட வகையில் அரச அதிகாரிகளால் சித்ரவதை, பாலியல் வன்புணர்வு, சட்டரீதியற்ற முறையில் தடுத்து வைத்தல், மற்றும் கொலை செய்யப்படுதல் போன்ற அக்கிரமங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். தமிழ் மக்களுக்கு எதிரான இந்த அக்கிரமங்கள் ஆட்சி மாற்றத்துக்கு முன்னர் அரச – பாதுகாப்புத் துறையினர் மட்டத்தில் எவ்வாறு திட்டமிட்டு இடம்பெற்றதோ. அதேபோன்ற திட்டமிடலுடன் ஆட்சி மாற்றத்தின் பின்னர் இப்போதும் இடம்பெறுகின்றது. இருண்ட உலகத்துக்குள் தமிழ் மக்களுக்கு எதிராக நடக்கும் இவ்வாறான வன்முறைகளில் 2015 ஆம் ஆண்டு மாத்திரம் 20 பேர் கடத்தப்பட்டு பாதிப்புகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இதில் 15 பேர் ஆண்கள் என்பதுடன் 16 பேர் முன்னாள் போராளிகளாவர். இவர்கள் அனைவரும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டுள்ளனர். 8 பேர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவர்கள். அத்துடன் பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் இலங்கை வந்தபோது காணாமல் போகச் செய்யப்பட்டோரை மீட்டுத் தருமாறு ஆர்ப்பாட்டம் செய்தோரும் அடங்குகின்றனர். இவர்களில் 8 பேரின் கடத்தல் குறித்து தமிழ் அரசியல்வாதிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்தன. எனினும் கடத்தல்கள் குறித்து அவர்கள் ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனப் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வாக்குமூலங்களில் குற்றஞ்சாட்டியுள்ளனர்