யாழ்ப்பாணம், கீரிமலை நகுலேச்சரத்தில் சைவ மக்களின் நிலங்களை அரசு சுவீகரிக்க முயற்சி செய்வதும், ஆன்மிகச் சூழலை சுற்றுலா மையமாக அமைக்கத் திட்டமிட்டுள்ளமையும் அநீதியான செயல் இதனை உடன் தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அகில இலங்கை இந்து மாமன்ற உப தலைவரும் தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத் தலைவருமான கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்துள்ளார்.
சரித்திர முக்கியத்துவம் மிக்க கீரிமலை நகுலேச்சர சூழலில் கீரிமலை காங்கேசன்துறை வீதியிலுள்ள கோவில்கள், தனியார் நிலங்கள், சமய நிறுவனங்களின் நிலங்களைக் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் உயர் பாதுகாப்பு வலயம் எனக் கூறி மக்களிடம் ஒப்படைக்காத அரசு தற்போது அந்தப் பிரதேசத்தை சுவீகரிக்கத் திட்டமிடுவது மிக அநீதியான செயலாகும்.
சித்தர்களின் சமாதிகள், சடையம்மா மடம், கிருஷ்ணன் கோவில், சிவன் கோவில், பாதாள கங்கை தீர்த்தசேத்திரம், கதிரையாண்டவர் கோவில் உட்பட அப்பாவி மக்களின் நிலத்தைச் சுவீகரிக்கத் திட்டமிடுவது மிகத் துரோகமான செயலாகும்.
நீண்டகாலமாக வலி.வடக்கு மக்கள் இந்தப் பகுதியை கையளிக்குமாறு விடுத்த வேண்டுதலுக்கு அரசு செய்யும் கைமாறு இதுதானா? இவ்விடயம் தொடர்பாக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்து கலாசார அமைச்சர் இவ்விடயத்தில் உடன் அக்கறை எடுக்கவேண்டும்.
காங்கேசன்துறையில் ஹோட்டல் அமைத்து வாணிபம் செய்யும் அப்பாவி மக்களின் நிலங்கள் மற்றும் சுக்கிரவார திருகோணச் சத்திரம் அறக்கட்டளையின் 106ஏக்கர் நிலம் யாவும் விரைவில் கையளிக்க வேண்டியது அரசின் கட்டாய கடனாகும் என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.