இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

117

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய 4ஆவது ஒருநாள் போட்டி பல்லேகலவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.

அதன்படி, இலங்கை அணியில் திக்வல்ல மற்றும் சமரவிக்ரம ஆகியோர் ஆரம்ப வீரர்களாக களமிறங்கினர். வோக்ஸின் பந்துவீச்சில் சமரவிக்ரம ஒரு ஓட்டத்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அணித்தலைவர் தினேஷ் சந்திமால் 33 ஓட்டங்கள் எடுத்தார்.

அதன் பின்னர், அரைச்சதம் அடித்த திக்வெல்ல 70 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 52 ஓட்டங்கள் எடுத்து மொயீன் அலி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

எனினும், ஷானகா மற்றும் திசர பெரேரா இணைந்து அணியின் ஓட்டங்களை உயர்த்தினர். இந்நிலையில் அரைச்சதம் கடந்த ஷனகா 66 பந்துகளில் 5 சிக்சர்கள், 4 பவுண்டரிகளுடன் 66 ஓட்டங்களும், பெரேரா 44 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

அகிலா தனஞ்சயா 32 ஓட்டங்கள் எடுக்க, இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 273 ஓட்டங்கள் எடுத்தது.

பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜேசன் ரோய் 45 ஓட்டங்களும், ஹேல்ஸ் 12 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் ஜோ ரூட் 32 ஓட்டங்களிலும், இயன் மோர்கன் 31 ஓட்டங்களிலும் களத்தில் இருந்தபோது மழை குறுக்கிட்டது. அப்போது, இங்கிலாந்து அணி 27 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 132 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில், டக்வர்த் லுவிஸ் முறைப்படி இங்கிலாந்து அணி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதன்மூலம், 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 3–0 என்ற கணக்கில் இங்கிலாந்து வெற்றி பெற்று, தொடரையும் கைப்பற்றியது.

இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி நாளை கொழும்பில் நடைபெறவுள்ளது.

SHARE