விபச்சாரம் என்பது பணம் பெற்றுக் கொண்டு பாலியல் சேவை புரியும் தொழில். பெரும்பாலும் இது பெண்கள் ஈடுபடும் தொழிலாக இருக்கிறது. இவர்கள் ‘வேசி’, ‘விபச்சாரி’, ‘விலைமாது’ என்று வெளிப்படையாகவும், ‘பாலியல் தொழிலாளி’ என நாசூக்காகவும் அழைக்கப்படுகிறார்கள். தெருக்களில் கைதட்டி அழைப்பவர்கள், விபச்சார விடுதிகளில் காத்திருப்பவர்கள், கூப்பிட்டால் சொன்ன இடம் வரும் உயர்ரக விலைமாதுகள் என இவர்கள் பலதரப்படுவர்.
உலகின் மிகப் புராதனமான தொழில் என இது குறிப்பிடப்பட்டாலும், வேட்டையாடுதல், விவசாயம் ஆகியவற்றுக்குப் பிறகே விபச்சாரம் வருகிறது. பெண்கள் ஈடுபட்ட தொழில்களுள்கூட, செவிலிப்பணிதான் முதலில் தோன்றியது. கி.மு 2400ல் தெற்கு மெஸபடோமியாவில் (இன்றைய ஈராக்) வசித்த சுமேரியர்கள்தாம், முதலில் விபச்சாரம் செய்ததாகத் தெரிகிறது. அவர்கள் தொழில் பட்டியலில் ரிணீக்ஷீ ரிவீபீ என்ற பெயரில் விபச்சாரத்தையும் வரிசைப்படுத்தியுள்ளனர். பணத்துக்காக அல்லாமல் மதச் சடங்காக, கோயில் சேவையாக இதைப் பின்பற்றியிருக்கிறார்கள்.
கி.மு 1780ல் பாபிலோனிய ஹமுராபி என்ற சட்ட நூல் விபச்சாரிகளின் சொத்துரிமை பற்றிப் பேசுகிறது. கி.மு 1075ல் வடக்கு மெஸபடோமியாவின் அஸ்ஸிரிய சட்டப்படி விபச்சாரிகளுக்கு தனி உடை இருந்தது. தெருவில் நடமாடும் போது குடும்பப் பெண்கள் முகத்தை மறைக்க வேண்டும்; விபச்சாரிகள் மறைக்கத் தேவையில்லை. ரஹாப் என்ற பாலஸ்தீனிய விலைமாது, தன் வீட்டை அடையாளப்படுத்த சிவப்பு நிற கயிறு தொங்க விட்டிருந்தாள். அதிலிருந்தே ‘சிவப்பு விளக்குப் பகுதி’ என்று பெயர் வந்ததாகச் சொல்கிறார்கள். பிற்காலத்தில் விபச்சார விடுதி சென்ற ரயில்வே ஊழியர்கள், தமது சிவப்பு விளக்கை வெளியே வைத்து உள்ளே போனார்கள். அதிலிருந்தும் வந்திருக்கலாம்.
முதன் முதலில் விபச்சார விடுதிகள் பண்டைய எகிப்தில் உருவாயின. கிரேக்க மெஸபடோமியப் பயணிகள் எகிப்து வந்துபோய் இருந்ததால் இவை முளைத்தன. ரோபோபிஸ் என்ற எகிப்திய விபச்சாரி தன் சம்பாத்தியத்தின் மூலம் ஒரு பிரமிட் கட்டியதாகக் குறிப்பிடுகிறார் வரலாற்றறிஞர் ஹெரோடாட்டஸ்.
பண்டைய கிரேக்கத்தில் மூன்று விதமான விபச்சாரிகள் இருந்தனர். Pornai என்ற அடிமை விபச்சாரிகள், தெருவில் விபச்சாரம் செய்பவர்கள், Hetaera என்ற படித்த விபச்சாரிகள் (சமூக செல்வாக்கும் சொகுசும் வாய்த்தவர்கள்). கி.மு 594ல் ஏதென்ஸ் கவிஞரும் சட்ட மேதையுமான ஸோலன், ஜனநெருக்கடி மிகுந்த நகரப்பகுதிகளில் அரசாங்க ஆதரவோடு விபச்சார மையங்களைத் திறக்கச் செய்தார். அவர்கள் அரசுக்கு அதிகம் வரி செலுத்தினர். விபச்சாரிகள் தனித்துத் தெரியும்படி ஆடை அணிந்தனர். செல்வந்தர்கள் தம் வீடுகளை விபச்சார விடுதிக்கு வாடகைக்கு விடுவது சகஜமாக இருந்தது.
கி.மு 180ல் ரோமானிய சக்ரவர்த்தி கலிகுலா விபச்சாரத்துக்கு வரிவிதித்தார். அதற்கு முறைப்படி லைசென்ஸ் தரப்பட்டது. லைசென்ஸ் இல்லாது தொழில் செய்தவர்கள் தண்டிக்கப்பட்டனர். செவிலிகள் விபச்சாரத்திற்குள் நுழையாமல் காவலர்கள் தடுத்தனர். பிரபலமான விபச்சாரிகளின் சிகை, உடை, நகை ஆகியவை ரோமானிய பெண்களின் ஃபேஷனில் வலுவான பாதிப்பை ஏற்படுத்தின.
பண்டைய இந்தியாவில் ‘நகர் வது’ (நகரத்தின் மணமகள்) என்ற பெயரில் பெண்களை ஊர்ப் பொதுச்சொத்தாக்கும் பழக்கம் இருந்தது. ஆச்சார்ய சதுர்சென் எழுதிய, ‘வைஷாலி கி நகர் வது’ என்ற நூலில் வரும் அம்ரபாலியும், கி.மு 200ல் சுத்ரகர் எழுதிய மிரிச்சகதிகா நூலில் வரும் வசந்தசேனாவும் இவ்வகையினரே.

கி.பி 590ல் ரிகாரட் என்ற ஸ்பெயின் மன்னர், கிறிஸ்துவத்துக்கு எதிரானது என்று விபச்சாரத்தை தடை செய்தார். விபச்சாரிகளுக்கு 300 கசையடி தந்து, நாடு கடத்தினார். ஆண்களுக்கு தண்டனை இல்லை. கி.பி 525ல் ரோமானிய மன்னர் ஜஸ்டினியன், முன்னாள் விபச்சாரியான தியோடரா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இருவரும் இணைந்து கொண்டுவந்த சட்டத்தில், விபச்சாரம் முறைப்படுத்தப்பட்டது. பல விபச்சார விடுதிகள் ஒழிக்கப்பட்டன. கட்டாயமாக இந்தத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பலர் விடுவிக்கப்பட்டனர். 1161ல் இங்கிலாந்து மன்னர் இரண்டாம் ஹென்றி லண்டனில் விபச்சாரிகள் மணம் செய்யாது இருக்க வேண்டும் என்றும், விபச்சார விடுதிகள் ஒவ்வொரு வாரமும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
1358ல் வெனிஸ் நகர கவுன்சில், விபச்சாரம் உலகின் அத்தியாவசியத் தேவை என அறிவித்தது. இதைத் தொடர்ந்து 14 மற்றும் 15ம் நூற்றாண்டுகளில் அரசாங்கமே விபச்சார விடுதிகளை இத்தாலிய நகரங்களில் திறந்தது. விபச்சார விடுதிகள் தனி வீதிகளில் இருந்தன. சாமியார்களும், மணமானவர்களும் அங்கு செல்ல தடை இருந்தது. நகர எல்லைச் சுவர்களுக்கு வெளியே மட்டுமே விபச்சாரம் செய்ய அனுமதிக்கப்பட்டது. 16ம் நூற்றாண்டில் சிஃபிலிஸ் என்ற பால்வினை நோய் ஐரோப்பாவில் பரவியபோது, இந்த விடுதிகள் அவசரமாக மூடப்பட்டன. விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு மரண தண்டனை அறிவித்தார் போப் ஐந்தாம் சிக்ஸ்டஸ்.
16ம் நூற்றாண்டில் எலிஸபெத் மகாராணியின் காலத்தில் விபச்சாரம் வளர்ந்தது. லண்டனின் சௌத்வார்க் சிவப்பு விளக்குப் பகுதியாக பிரபலமடைந்தது. விடுதிகள் வெண்சுதை கொண்டு பூசப்பட்டன. 17ம் நூற்றாண்டின் இறுதியில் பாரிஸில் விபச்சாரிகளுக்கு பேட்ஜும் தனி உடையும் கட்டாயமாக்கப்பட்டன. மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. ரஷ்ய ஜார் மன்னரின் மனைவி எலீஸாவீடா பெட்ரோவ்னா, ரஷ்யாவில் இருந்த அத்தனை விபச்சாரிகளையும் தேடிக் கண்டுபிடிக்க உத்தரவிட்டார். இப்படி பிடிபட்டவர்களை சைபீரியாவுக்கு நாடு கடத்தினர்.

1875ல் அமெரிக்க அரசு பேஜ் ஆக்ட்டை அமல்படுத்தியது. இச்சட்டம் பெண்களை விபச்சாரத்துக்காக நாட்டுக்குள் கொண்டு வருவதைத் தடை செய்தது. 1910ல் மேன் ஆக்ட் கொண்டு வரப்பட்டது. கட்டாய விபச்சாரம் செய்வதும், விபச்சாரத்துக்காக பெண்களைக் கடத்துவதும், பதுக்கி வைப்பதும் குற்றங்களாக அறிவிக்கப்பட்டன.
கிறிஸ்துவ யூனியனின் அழுத்தத்தினால் 1910 முதல் 1911 வரை அமெரிக்காவில் விபச்சாரம் தடை செய்யப்பட்டது. ஆனால் தற்காலிக விபச்சார விடுதிகள் ஆங்காங்கே முளைத்தபடி இருந்தன. நியூயார்க்கில் விலைமாதுகள் வெளிப்பார்வைக்கு கோரஸ் பாடும் தொழில் செய்வது போல் காட்டிக் கொண்டனர். 1920களில் ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹங்கேரி, இத்தாலி நாடுகளில் விபச்சார விடுதிகள் தடை செய்யப்பட்டன. 1949ல் பாரிஸில் தடை வந்தது.
1932ல் இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பான் கைப்பற்றிய பகுதிகளிலிருந்து 3 லட்சம் பெண்களை தம் படைவீரர்களுக்கு விபச்சாரம் செய்ய பணியமர்த்தியது. இது ஜப்பானை இன்றளவும் மன்னிப்பு கேட்க வைத்துக் கொண்டிருக்கிறது.
1955ல் Moonlight Bunny Ranch என்ற புகழ்பெற்ற விபச்சார விடுதி அமெரிக்காவின் நெவாடாவில் திறக்கப்பட்டது. 20 வருடங்கள் கழித்து நெவாடாவில் விபச்சாரம் சட்டபூர்வமாக்கப்பட்ட பின் இவ்விடுதி லைசன்ஸ் பெற்று இயங்கத் தொடங்கியது 1999ல் ஸ்வீடன் உலகில் முதன்முறையாக விபச்சாரத்தை பெண்களுக்கு எதிரான வன்முறையாக அறிவித்தது. விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பெண்களை வேறு பணிகளுக்கு மாற்ற முயற்சி செய்யப்பட்டது. அங்கே செக்ஸை விற்பது குற்றம் அல்ல… ஆனால் செக்ஸை வாங்குவது குற்றம்!
2000ல் நெதர்லாந்தில் விபச்சாரிகள் குறிப்பிட்ட வயதிற்குள் இருந்து லைசென்ஸ் பெற்றிருந்தால் மட்டும் விபச்சாரம் செய்ய அனுமதிக்கப்பட்டது. 2002ல் ஜெர்மனி, கஸ்டமருக்கும் விபச்சாரிக்கும் எழுத்துபூர்வ ஒப்பந்தம் இருந்தால் அனுமதித்தது.
மதுரையில் விலை மகளிர் இருந்ததாக சிலப்பதிகாரம் சொல்கிறது. அரசவைகளில் ‘கணிகைகள்‘ என்ற பெயருடன் செல்வாக்கு செலுத்தினர் இந்த வகைப் பெண்கள் சிலர். பல மன்னர்கள் இவர்களுக்கு உயரிய இடத்தை வழங்கியிருந்தனர்.
இந்தியாவில் 16 மற்றும் 17ம் நூற்றாண்டுகளில் கோவாவில் ஜப்பானிய அடிமைப் பெண்களை வைத்து போர்த்துகீசியர்கள் விபச்சார விடுதிகளை நடத்தினர். 18 மற்றும் 19ம் நூற்றாண்டுகளில் கிழக்கிந்தியக் கம்பெனி ஐரோப்பா மற்றும் ஜப்பானிலிருந்து பெண்களை இந்தியாவில் இறக்குமதி செய்து விபச்சார விடுதிகளை ஏற்படுத்தியது. 1956ல் முறைகேடான விபச்சாரத் தடுப்புச் சட்டம் இந்தியாவில் செக்ஸ் தொழிலைத் தடை செய்திருந்தாலும், பல பகுதிகளில் விபச்சாரம் நடைமுறையில் இருந்து வருகிறது. பிரிட்டிஷ் ஆட்சியில் நிறுவப்பட்ட மும்பையின் காமாத்திபுரா இன்று இந்தியாவின் மிகப்பெரிய சிவப்பு விளக்குப்பகுதியாக விளங்கி வருகிறது. கொல்கத்தாவின் சோனாகாஜி விபச்சாரப் பகுதி பற்றிய Born into Brothels என்ற டாகுமெண்டரி 2004ல் ஆஸ்கர் விருது பெற்றது.
நளினி ஜமீலா என்ற பாலியல் தொழிலாளி, தன் சுயசரிதையை நூலாக வெளியிட்டுள்ளார். இது தமிழிலும் வெளியானது. இதேபோல கலைவாணி என்பவரது ‘ஒரு பாலியல் தொழிலாளியின் கதை’ என்ற சுயசரிதையும் கவனிக்கத்தக்க பதிவு. வருமானம் மட்டுமல்ல; அவமானமும் சேர்த்தே சம்பாதிக்கின்றனர் விபச்சாரிகள்!