இந்தி நடிகை தீபிகா படுகோனேவும், நடிகர் ரன்வீர்சிங்கும் பல வருடங்களாக காதலித்து வந்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
கடந்த 2 வாரமாக திருமண ஏற்பாடுகள் நடந்தன. இத்தாலியில் லோக் கோமா பகுதியில் உள்ள காஸ்டாதிவா ரிசார்ட் மற்றும் வில்லா தி எஸ்ட் ஆகிய இடங்களில் திருமண சடங்குகளை நடத்த முடிவு செய்தனர். தீபீகா படுகோனேவும், ரன்வீர் சிங்கும் 2 தினங்களுக்கு முன்பு மும்பையில் இருந்து இத்தாலி புறப்பட்டு சென்றனர்.
அங்கு நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. தீபிகாவும், ரன்வீரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர். இன்று திருமணம் நடக்கிறது. திருமணத்துக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர். உலக தலைவர்கள் வரும்போது அளிக்கப்படும் பாதுகாப்புக்கு இணையாக இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறினார்கள்.
திருமணத்துக்கு வந்தவர்களின் செல்போன்களில் கேமராவை ஸ்டிக்கர் ஒட்டி மறைத்தனர். திருமணம் நடக்கும் இடம் ஏரி ஓரத்தில் இருப்பதால் படகில் பாதுகாப்புக்கு ஆட்களை நிறுத்தி உள்ளனர். திருமணத்துக்கு 100 பேர் மும்பையில் இருந்து சென்றுள்ளனர். திருமண பரிசுகளை அறக்கட்டளைக்கு அளிப்பதாக இருவரும் அறிவித்து உள்ளனர்.