இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சு நடத்துவதற்கு, பாரதீய ஜனதாக் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள பங்காளிக்கட்சிகள் கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டுள்ளன. இதனால், சந்திப்புக்கான நேரம் ஒதுக்குவதில் இருநாட்டு வெளிவிவகார அமைச்சுகளும் சிக்கலை எதிர்கொண்டுள்ளன என்று இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. எனினும், முக்கிய கட்சிகளின் தலைவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படலாம் எனவும் அவ்வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
மூன்று நாட்கள் பயணம் மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 14ஆம் திகதி இந்தியாவுக்குச் செல்லவுள்ளார். 15ஆம் திகதியே அவர் முக்கிய சந்திப்புகளில் ஈடுபடுவார். காலையில் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியையும் அதன்பின்னர் வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜையும் அவர் சந்தித்துப் பேச்சு நடத்துவார்.
அன்றையதினம் மதியம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசமுறை சந்திப்புகளை நடத்துவார். இதன்போது ரணிலுக்கு மோடியினால் மதியபோசன விருந்தளிக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து முதலீட்டாளர்கள் உட்பட முக்கிய குழுக்களுடனான சந்திப்பை ரணில் மேற்கொள்வார். இந்நிலையிலேயே, இலங்கைப் பிரதமரைச் சந்திப்பதற்கு பாரதீய ஜனதாக் கட்சித் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
டில்லிக்கு வெளியில் பிரதமரின் பயணம் அமையாது என்பதால், ஓரிரு கட்சிகளின் தலைவர்களை அவர் சந்திக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.