இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள அவ சர நோயாளர் காவு வண்டி சேவையில், இந்தியர்கள் எவருக்கும் தொழில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என வெளிவிவகார பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ச டி சில்வா உறுதியாக தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நோயாளர் காவு வண்டியின் செயற்பாடு தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை ராஜகிரியவில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இந்திய – இலங்கை புரிந்துணர்வு அடிப்படையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைய இந்திய துரித நோயாளர் காவு வண்டி சேவைகள் கடந்த 28ஆம் திகதி இலங்கையில் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
இந்திய துரித நோயாளர் காவு வண்டி சேவைகள் ஊடாக இலங்கையைச் சேர்ந்த 470 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா இதன்போது தெரிவித்திருந்தார்.
இதேவேளை இந்த துரித அம்பியூலன்ஸ் சேவையில் இணைவதற்காக இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் தெரிவு செய்யப்பட்ட இலங்கை நாட்வர்கள் 200 பேர் அண்மையில் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.