கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை அரசு தவறவிடும் பட்சத்தில் நாடு பின்னோக்கியே செல்லும் என எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரிட்டனின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களுக்கான அமைச்சர் மார்க் பீல்ட் நேற்று கொழும்பில் வைத்து இரா.சம்பந்தனை சந்தித்து பேசியுள்ளார்.
இதன்போதே இரா.சம்பந்தன் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
“கடந்த அரசோடு ஒப்பிடுகையில் இந்த அரசின் செயற்பாடுகளில் மாற்றம் உள்ளது. ஆயினும், அது மாத்திரம் போதாது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு அரசு இரண்டு வருட கால அவகாசம் கோரியிருந்தது. அந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய தாமதம் நிலவுகின்றது.
மேலும், மிக விரைவாக தீர்வு காணப்பட வேண்டிய படையினர் வசமுள்ள காணிகள் விடுவிப்பு, நீக்கப்படும் என பலமுறை அரசு வாக்கு கொடுத்தும் இன்னமும் நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற விடயங்கள் தாமதமின்றி செயற்படுத்தப்பட்டிருக்க வேண்டியவை.
உண்மையை கண்டறிவதற்கான ஆணைக்குழு இன்னமும் நிறுவப்படாமையும் கவனிக்கப்படவேண்டிய விடயம். உண்மையை மறைத்து விடமுடியாது. உண்மை நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. உண்மையை கண்டறிந்து நீதியை நிலைநாட்ட உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு நிறுவப்பட வேண்டும்.
தமிழ் மக்களின் நீண்ட கால அதிகாரப் பகிர்வுக் கோரிக்கையானது ஓர் அரசியல் யாப்பினூடாகத் தீர்வு காணப்பட வேண்டிய ஒன்றாகும். இந்த விடயம் தொடர்பில் கடந்த 30 வருட காலமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன.
புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் இனிமேலும் தாமதமின்றி முன்னெடுக்கப்பட வேண்டும்.
நாம் பிளவுபடாத, பிரிக்க முடியாத, ஒருமித்த இலங்கை நாட்டுக்குள் தீர்வொன்றை எதிர்பார்க்கின்றோம். இந்தக் கோரிக்கைக்கு எமது மக்கள் தொடர்ச்சியாகத் தேர்தல்களிலே அங்கீகாரம் வழங்கியுள்ளார்கள். மக்களது இந்த ஜனநாயக தீர்ப்பு மதிப்பளிக்கப்பட வேண்டிய ஒன்று.
நாங்கள் இந்த நாட்டில் சம உரிமையுள்ள பிரஜைகளாக சுயகௌரவத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ விரும்புகின்றோம். மக்களுக்குத் தமது நாளாந்த நடவடிக்கைகள் தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.
எமது இளைஞர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்துவதை நாம் விரும்பவில்லை. கடந்த கால யுத்தத்தின் நிமித்தம் அவர்கள் அநேக இழப்புகளை சந்தித்துவிட்டார்கள்.
கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தைத் தவறவிட முடியாது. தவறவிடும் பட்சத்தில் ஆட்சியில் யார் இருந்தாலும் இந்த நாடு பின்னோக்கியே செல்லும்.
ஆகவே, எல்லாக் கட்சிகளும் ஒன்றிணைந்து நீண்டகாலப் பிரச்சினைக்குச் சரியான தீர்வைக் காண முன்வருவது அவசியம். அவ்வாறு இது தீர்க்கப்படாவிடில் இந்த நாடு மீண்டும் ஒரு வன்முறையை நோக்கி நகரும்.
அரசு இணைந்து முன்மொழிந்த ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் தொடர்பில் கொடுத்த வாக்குறுதிகளுக்கு அரசு பொறுப்புக்கூற வேண்டும். இந்த தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
அரசு தனது மக்களுக்கு நீதியைச் செய்வதிலிருந்து விலகமுடியாது. இந்த தீர்மானமானது மாற்றமடையாமல் நிறைவேற்றப்பட வேண்டும். சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசு கடைப்பிடிக்க வேண்டும்.
புதிய அரசியல் யாப்பு உள்ளிட்ட விடயங்கள் சரியான முடிவை அடையும்வரை மிக நெருக்கமான சர்வதேச பங்களிப்பு அவசியம். அதனை தவிர்க்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் இதன் போது கருத்து தெரிவிக்கையில்,
“புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் அரச தலைவர்கள் மத்தியில் அரசியல் விருப்பு குறைவாக காணப்படுகின்றது. அநேக விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்ட போதிலும் இன்னும் ஒரு தயக்க நிலை அரச தலைவர்கள் மத்தியில் காணப்படுகின்றது” என தெரிவித்துள்ளார்.
சுமார் ஒரு மணித்தியாலம் இடம்பெற்ற இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இலங்கைக்கான பிரித்தானியத் தூதுவர் ஜேம்ஸ் டோரிஸ் மற்றும் தூதரக அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.