“இனங்களிடையேயான நல்லிணக்கம் நோக்கிய இலங்கையின் முயற்சிகளுக்கு கொழும்பிலிலுள்ள அமெரிக்கத் தூதரகம், அமெரிக்க அரசு ஆகியவற்றின் ஆதரவு உண்டு” என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷாப் தெரிவித்தார். கண்டி மகாநாயக்க தேரர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தேரர்களுடன் சந்தித்துப் பேச்சு நடத்தியபோது இலங்கையின் கலாசாரம், பெளத்தம் பற்றிக் கூடுதலாக அறிந்துகொண்டதாக அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டார். பெளத்த சமய அறிஞர்களுடன் நெருக்கமான உறவை வைத்திருக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். நல்லிணக்கம், ஒற்றுமைப்பட்ட ஜனநாயகம், செழிப்பான சுதந்திரம் ஊடாக சகலருக்குமான இலங்கையைக் கட்டியயழுப்புவதற்கு, அமெரிக்கத் தூதரகமும், அமெரிக்காவும் உதவத் தயாராக இருப்பதாகவும் அமெரிக்கத் தூதுவர் கூறினார்.
“கண்டியில் எனது உத்தியோகபூர்வ பயணத்தைத் தொடங்கியதையடுத்து நான் மகிழ்ச்சியடைகின்றேன். நான் இலங்கை முழுவதையும் சுற்றிப்பார்க்க விருப்பமாக உள்ளேன்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இலங்கைக்கான அமெரிக்காவின் தூதுவராக அண்மையில் பதவியேற்ற அதுல் கேஷாப், கொழும்புக்கு வெளியே தனது முதல் உத்தியோகபூர்வமான விஜயமாக கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு நேற்றுமுன்தினம் சென்றார். அதன் பின்னர் அஸ்கிரிய, மல்வத்தை மற்றும் ராமன்ய நிகாயாவின் அதியுயர் பீடங்களின் மஹாநாயக்கர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.