இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பில் ஆராய்வதற்காக, 10 பேர் கொண்ட குழு ஒன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின்போது நியமிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிலிருந்து தலா இருவர் என்ற அடிப்படையில் இதில் நியமிக்கப்படவுள்ளனர் என்று கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு, கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் எடுக்கப்படும் முடிவுகள் ஓரிருவரால் மாத்திரமே தனித்து எடுக்கப்படுவதாக ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பால் குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளது.
இதன்போது, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், முக்கியமான தருணங்களில் அவ்வாறு முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கக்கூடும் என்றும், இனிமேல் இவ்வாறு நடைபெறாது என்றும் தெரிவித்தார். அத்துடன், கூட்டமைப்பிலுள்ள அனைவரும் ஒற்றுமையாக அரசியல் தீர்வுக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தீர்வு விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் 10 பேர் கொண்ட குழுவை நியமிப்பது என்றும், இந்தக் குழுவை அடுத்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடம்பெறும் மார்ச் 6ஆம் திகதி நியமனம் செய்வது என்றும் இந்தக் கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், ரெலோ அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் க.சர்வேஸ்வரன் (ஈ.பி.ஆர்.எல்.எவ்.), கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் (ஈ.பி.ஆர்.எல்.எவ்.) ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
புளொட் அமைப்பு சார்பில் எந்தவொரு அங்கத்தவர்களும் இதில் பங்கேற்றிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் யாழ்ப்பாணத்தில் நின்ற காரணத்தால் அவரால் மேற்படி கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
“கூட்டமைப்பில் உள்ள அனைவரும் ஒற்றுமையாக நின்று அரசியல் தீர்வுக்கான எமது நடவடிக்கைகளை வெகுவிரைவாக முன்னெடுப்போம்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.