நத்தார் பண்டிகையை முன்னிட்டு அரசியல் கைதிகளுக்கு விடுதலை வழங்க கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ ஒத்துழைப்பு அமைப்பு நேற்று ஜனாதிபதியின் மேலதிக செயலாளரை சந்தித்து தமது கோரிக்கையை அடங்கிய மகஜரை கையளித்ததாக அந்த அமைப்பை சேர்ந்த அருட்தந்தை ஷெரீட் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
அரசியல் கைதிகளை விடுதலை செய்வது நாட்டின் தேசிய நல்லிணக்கத்திற்கு மிகவும் முக்கியமானது என தெரிவித்துள்ள அவர், தான் அரசியல் கைதிகளில் சுக துக்கங்களை தேடிப்பார்த்தாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் கைதிகளை விடுதலை செய்வது தவறில்லை என ஜனாதிபதி பாராளுமன்றத்தில் கூறிய போதிலும் அரசியல் கைதிகளின் விடுதலை இதுவரை தாமதமாகி வருவதாக மனித உரிமை செயற்பாட்டாளரான அருட்தந்தை மாரிமுத்து சக்திவேல் கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது அதிகாரத்தை பயன்படுத்தி அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு பயிற்சிகளை வழங்கி, விடுதலை செய்து, சமூகத்துடன் இணைத்தார் எனவும் தற்போது சிறையில் இருக்கும் ஏனைய அரசியல் கைதிகளை விடுதலை செய்வதில், மகிந்த ராஜபக்ச காலத்தில் இருந்து தொடரும் இனவாதமே தடையாக இருக்கின்றது எனவும் அருட்தந்தை சக்திவேல் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால், இனவாத சக்திகளை தோற்கடித்து நத்தார் பண்டிகை காலத்தில் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.