உரிமைகளுக்காக பேரம் பேசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனேயே தமிழ் மக்கள் உள்ளார்கள் என்பதை மீண்டுமொரு தடவை தமிழ் மக்கள் உணர்த்தியுள்ள நிலையில் இனவிடுதலைக்காக அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போம் என வன்னி மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வெற்றியீட்டிய ந.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
தனது வெற்றிக்காகவும், கூட்டமைப்பின் பெருவெற்றிக்காகவும் ஆதரவளித்த பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பிற்கும் உளமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.
தனது வெற்றிக்காக ஆதரவளித்தவர்களுக்கு நன்றிகளை தெரிவிக்கும் ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
பல்வேறு சக்திகள் எமது வாக்குகளை பிரிப்பதற்காக களமிறக்கப்பட்ட போதிலும், அதிகாரத்தில் இருந்தவர்கள் அவசர அவசரமாக நிவாரண உதவிகள் அன்பளிப்புகளை வழங்கிய போதிலும், அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் என்று முகம் பார்க்காமல், ‘நாம் என்றுமே உரிமைகளுக்காக போராடுகின்ற தமிழ் தேசியக்கூட்டமைப்புடனேயே இருக்கின்றோம்’ என்பதை எமது மக்கள் மிகத்தெளிவாக சகலருக்கும் புரிந்துகொள்ளக்கூடிய மொழியில் தெரிவித்துள்ளனர்.
கடந்த கால எனது கொள்கைகள், வேலைத்திட்டங்கள், பணிகளை ஏற்றுக்கொண்டு அங்கீகாரம் வழங்கி எனக்கு வாக்களித்த வன்னி வாழ் மக்கள், எதிர்காலத்தில் அதனை விடவும் அதிகமாக தங்களுக்கு சேவையாற்றுமாறு நான் என்றும் தங்களது வீட்டுப்பிள்ளை என்ற உரிமையுடன் உத்தரவு வழங்கியுள்ளார்கள்.
நிரந்தர அரசியல் தீர்வுடன் எமது மக்களின் உடனடி பிரச்சினைகளான மீள்குடியேற்றம், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போகச்செய்யப்பட்டோரை கண்டறிதல், பெண்களை தலைமைத்துவமாகக்கொண்ட குடும்பங்களின் வாழ்க்கைத்தர மேம்பாடு, போரினால் அவையங்களை இழந்த விசேட தேவைக்குள்பட்டவர்களின் வாழ்வாதாரம், இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு, இவற்றுடன் நிலையான அபிவிருத்தியை நோக்கி பயணிக்க அனைவரும் ஒன்றுபட்டு வழங்கிய ஆணையுடன் எனது அடுத்து கட்ட செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தாங்கள் பூரண ஒத்துழைப்புக்களை நல்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.
என் சுயத்தைப்பற்றி, எனது கொள்கை பற்றி, எனது அரசியல் வேலைத்திட்டங்கள், மக்கள் நலப்பணிகள் பற்றி, ஒவ்வொரு கிராமங்கள் தோறும், அந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொரு தமிழ் குடிமகனுக்கும் எடுத்துச்சென்று சேர்ப்பித்து எனது வெற்றிக்காக அரும்பாடுபட்டு உழைத்த ஆதரவாளர்கள், நலன்விரும்பிகள், எமது கட்சியின் தோழர்கள், சிவில் சமுக அமைப்புகள், அமைப்புகளின் பிரதிநிதிகள், தாயக – தமிழக – புலம்பெயர் வாழ் உறவுகள், குறிப்பாக அரசியல் கைதிகளின் உறவினர்கள், காணாமல் போகச்செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் ஊடக அன்பர்கள் அனைவரையும் எனது நெஞ்சத்தில் ஏந்தி நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
கூடவே வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவளித்து பெருவெற்றியீட்ட உதவிய அனைத்து தமிழ் மக்களுக்கும் எனது உணர்வுபூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.