
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 36ஆவது கூட்டத் தொடர் இன்று திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 29ஆம் திகதிவரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. இம்முறை கூட்டத் தொடரில் இலங்கையிலிருந்து அமைச்சர்கள் மட்டக்குழு பங்கேற்க மாட்டாது என்பதுடன் இலங்கை குறித்த எந்த விவகார மும் கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படவும் இல்லை.
மேலும் ஜெனிவாவிலுள்ள இலங்கை வதிவிட பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க தலைமையிலான குழுவினரே 36 ஆவது கூட்டத் தொடரில் இலங்கையின் சார்பாக கலந்து கொள்ளவுள்ளனர்.
திங்கட்கிழமை முதலாவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தலைவரும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளரும் உரையாற்றவுள்ளனர். இதன்போது இலங்கையின் அடுத்தகட்ட நடவடிக்கை மற்றும் இதுவரையான செயற்பாடுகள் குறித்து சில விடயங்களை முன்வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக 2015 ஆம் ஆண்டு ஜெனிவா பிரேரணை அமுலாக்கம் தொடர்பில் தனது மதிப்பீட்டை ஐ.நா. மனித உரிமை ஆணையாளரும் செய்ட் அல் ஹுசேன் இன்றைய முதலாவது உரையில் வெ ளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தக் கூட்டத் தொடரில் இலங்கையின் விவகாரங்கள் எதுவும் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படவில்லை எனினும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் தமது நேர உரைகளின்போது இலங்கை குறித்து கேள்வியெழுப்பும் என தெரிவிக்கப்படுகின்றது.
அதாவது ஜெனிவா அமர்வுகளின்போது பொதுவான விவாதங்களின்போது பல்வேறு தலைப்புக்களின் கீழ் உரையாற்றவுள்ள சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் இலங்கை தொடர்பில் வலியுறுத்தல்களை மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் சர்வதேச மன்னிப்புச் சபை என்பன இலங்கை குறித்து வலியுறுத்தல்களை விடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கை தொடர்பில் பல்வேறு உபகுழுக் கூட்டங்களை ஜெனிவா வளாகத்தில் நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இலங்கை உட்பட பல்வேறு நாடுகளுக்கு மேற்கொள்ளப்பட்ட விஜயங்கள் தொடர்பில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக ஆராயும் ஐ.நா. வின் விசேட குழுவானது ஒரு நீண்ட அறிக்கையை ஐ.நா. மனித உரிமை பேரவையின் 36 ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பித்திருக்கிறது. அதில் இலங்கை தொடர்பாகவும் சில விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.