இலங்கையின் இன்றைய அரசு தொடர்பில் உள்ளுரிலும் சர்வதேச மட்டத்திலும் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதற்குக் காரணம் மொட்டுக் கட்சியும், சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து தமக்கு ஏற்றாற்போல ஒருவரை ஜனாதிபதியாக பரிந்துரை செய்து பாராளுமன்றிலும் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சிக்கு கொண்டுவந்தமையேயாகும். இதனால் இவர்களுக்குள் பிளவும் ஏற்பட்டுள்ளது. இவர்களால் பதவிக்குக் கொண்டுவரப்பட்ட ரணில் விக்கிரமசிங்க அவர்கள் எவ்வாறு நாட்டு மக்களுக்கு உண்மையாக செயற்பட முடியும் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
ஏற்கனவே மக்களின் கடும் எதிர்ப்பினைச் சந்தித்துள்ள மேற்கூறிய தரப்பினரைக் காப்பாற்றவே ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. முப்படைகளின் துணைகொண்டு மக்களை அடக்கியாள நினைத்து செயற்பட்ட தற்போதைய ஜனாதிபதி தொடர்பில் மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். அவர் தனது அணி சார்ந்தவர்களிடத்தில் ஒரு முகத்தினையும், பாராளுமன்றிலும் நாட்டு மக்கள் மத்தியில் பிறிதொரு முகத்தினையும் காட்டி நழுவிப் போகும் அரசியலை தொடர்ந்து செய்து வருகின்றார்.
பதவியிலிருந்து விலகவும் முடியாமல், தனது கட்சியினைப் பலப்படுத்தவும் முடியாமல், தனக்குரிய கடமையினை சரிவரச் செய்ய பலரது கருத்தினையும் செவிமடுக்கத் தலைப்பட்டுள்ளார். அவரைக் கொணர்ந்தவர்களுக்கு விசுவாசமாக நடந்துகொள்ளவேண்டிய தேவை அவருக்கு இருக்கிறது. இல்லையெனில் எந்த நேரத்திலும் அவரது பெரும்பான்மைப் பலம் பாராளுமன்றில் தகர்த்தெறியப்படலாம் என்கிற அச்சம் அவரைச் சூழ்ந்துள்ளதால், அனைவரிடத்திலுமிருந்து தப்பித்துக்கொள்ள அவரவருக்கு ஏற்றாற்போல செயற்படவேண்டிய நிலை ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் மக்களுக்குத் தேவையான விடயங்களைச் செய்ய ஜனாதிபதியால் முடியவில்லை மாறாக மேலும் மக்கள் மீது சுமை ஏற்றப்பட்டுள்ளது. நாட்டின் ஆட்சியானது ஸ்திரமானதாக இருக்கவேண்டும். அப்போதுதான் தங்குதடையின்றி மக்களுக்கான பணியை ஜனாதிபதியால் மேற்கொள்ள இயலும். இன்று இலங்கையின் ஆட்சி அப்படியானதல்ல, நிலையற்றது. நழுவல் போக்குடையது.
எல்லாத்துறைகளுக்குள்ளும் புதிய திட்டங்களைக் கொணர்ந்து ஆட்சியை இழுத்தடித்துவிட்டு, ஜனாதிபதித் தேர்தல் என்கிற ஒன்று வருகின்றபோது மீண்டும் ராஜபக்சக்கள் பதவிக்குவர தற்காலிகமாக நியமிக்கப்பட்டவரே இந்த ரணில் விக்கிரமசிங்க அவர்கள். இன்றும் அவர்கள் கூட்டாகவே இருக்கிறார்கள். பிரதமராக மொட்டுக் கட்சி உறுப்பினர் பதவி வகிக்கையிலும் ராஜபக்சக்களின் நிழலே அவர்களின் பின்னால் தொடர்கின்றது. அவர்களாலேயே இன்றைய ஆட்சி நகர்த்திச் செல்லப்படுகின்றது. இன்றும் தீர்மானிக்கும் சக்தியாக ராஜபக்சக்களே இருக்கின்றனர்.
ஊழல்வாதிகளாக, மனித உரிமையை மீறிச் செயற்பட்டவர்களாக, இந்த நாட்டை அழித்தவர்களாக தென்னிலங்கை மக்களாலேயே குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் இன்று பொதுவெளியில் நடமாட முடிகிறதெனில் அதற்குக் காரணம் யார்?, கடந்த காலங்களில் ஏற்பட்ட தவறுகள் தான் இன்றைய பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் எனக்கூறும் இன்றைய ஜனாதிபதி, அவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காதது ஏன்?. தெற்கின் பெரும்பான்மையான சிங்கள மக்களால் தூக்கிவீசப்பட்ட ராஜபக்ச தரப்பினர் தொடர்பில் இன்றும் ஜனாதிபதி மௌனம் சாதிப்பது ஏன்?. தமிழ் மக்களின் தீர்வு விடயங்கள் தொடர்பிலும் அவரது நழுவல் போக்கு தென்பட்டுள்ளது. இதன் பின்னணியிலும் ராஜபக்சக்கள் உள்ளனர் என்பது உண்மை.
மக்களது ஆணையில்லாமல் தனக்கு ஏற்றாற்போல ஆட்சியை அமைத்துக்கொண்டு மக்கள் முன் ஒன்றையும், தனது அணிக்குள் ஒன்றையும் செய்துவரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களால், நாட்டு மக்களுக்குத் தேவையான ஆக்கபூர்வமான விடயங்களைச் செய்ய முடியாது, நழுவிப் போகும் அரசியலைத் தான் செய்ய முடியும். தனியாக சுயமாக சிந்தித்துத் செயற்படும் அதிகாரம் அவருக்கு இல்லை என்பதே இன்றைய யதார்த்தம்.