“இன்றைய அரசின் மீது வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் கொண்டுள்ள வெறுப்புணர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது மாணவன் செந்தூரனின் மரணம்.
இந்த மாணவன் தனக்குத்தானே தண்டனை வழங்கிக்கொண்டு விடுத்துள்ள செய்தியை அரசு அசட்டை செய்யக்கூடாது” என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார். நேற்று நாடாளுமன்றத்தில் வரவு – செலவுத்திட்ட உரை மீதான ஐந்தாவது நாள் விவாதத்தில் உரையாற்றும்போதே இந்த எச்சரிக்கையை விடுத்தார். “தனது வெறுப்புணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாத நிலையிலே இந்த இளம் மாணவன் தனக்குத்தானே தண்டனையை வழங்கிக்கொண்டுள்ளான். இந்த மாணவனின் மரணம், தொடர்ச்சியாக எம் மக்கள் கொண்டுள்ள விரக்தியையும், வெறுப்புணர்ச்சியையும் வெளிப்படுத்தும் ஒரு அழுத்தமான செய்தியாகவே அமைந்துள்ளது. இதனை இன்றைய அரசு புரிந்துகொள்ளவேண்டும். இம்மாணவனின் இழப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு இம்மாணவனின் பெற்றோருக்கும், வடக்கு, கிழக்கு மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த அரசாங்கம் இம்மாணவன் விடுத்துள்ள உணர்வுபூர்வமான செய்தியை அசட்டை செய்யாமல் இனியாவது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்” எனவும் அவர் வலியுறுத்தினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு மாற்றம் வேண்டி இந்த அரசை உருவாக்க உதவியதேயன்றி, அரசின் பங்காளிகள் அல்ல என்றும் அவர் கூறினார். தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் உரையாற்றியபோது கூறியதாவது:- “யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட மோசமான நிலை குறித்து சபையின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகின்றேன். செந்தூரன் என்ற மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரின் புத்தகங்களும், அவர் எழுதிய கடிதமும் ரயில் தண்டவாளத்தில் காணப்பட்டன. அந்த மாணவனின் நடவடிக்கை எதைக் காட்டுகின்றது? வடக்கு, கிழக்கு மக்களின் வெறுப்பை இந்த மாணவனின் அணுகுமுறை பிரதிபலிக்கின்றது. அவர் ஒரு மோசமான நடவடிக்கையைத் தேர்ந்தெடுத்துள்ளார். மக்களின் வெறுப்பை எடுத்துக்காட்டி தனக்குத் தண்டனை வழங்கியுள்ளார். இதனை இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்த மாணவனால் வழங்கப்பட்ட செய்தியை அரசு புரிந்துகொள்ளவேண்டும். மக்களின் வெறுப்பைக் காட்டும்முகமாக மாணவன் தனக்குத் தண்டனை வழங்கியுள்ளார். அவர் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல்போனதால் வந்ததே இந்த வெறுப்புணர்ச்சியாகும். இதைப் புரிந்துகொள்ளவேண்டும்; தொடர இடமளிக்கக்கூடாது. இந்நிலையில், இந்த மாணவனின் தாய், தந்தை மற்றும் வடக்கு, கிழக்கிலுள்ள மக்களுக்கு அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன். இந்தச் செய்தியை விளங்கிக்கொள்ளவேண்டும். தாமதப்படுத்தாமல் முடிவுகாணவேண்டும்”