இன அழிப்பு விசாரணையைக் கோரிய தீர்மானத்தை உரிய தருணத்தில் நிறைவேற்றுவதற்கான சூழலை உருவாக்கினோம் இதனால் முதலமைச்சரை விழிப்புறச் செய்தோம் -ஆனந்தி சசிதரன் தினப்புயல் ஊடகத்திற்கு பரபரப்பு பேட்டி
கேள்வி: ஐ.நா. மனித உரிமைச் சபையின் விசாரணை அறிக்கை ஒரு சர்வதேச
விசாரணை என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?
பதில்: இலங்கையில் இடம்பெற்ற சர்வதேசக்குற்றங்கள் தொடர்பான ஐ.நா. மனித
உரிமை உயர்ஸ்தானிகரின் அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு
அறிக்கையே அது. அந்த ஆய்வு சர்வதேச மட்டத்திலேதான் நடந்தது. ஆனால்,
அது ஒரு குற்றவியல் சார்ந்த விசாரணை அல்ல. ஏற்கனவே ஐ.நா மன்றம்
இரண்டு ஆய்வுகளைச் செய்திருந்தது. முன்னையவற்றைவிடவும் பருமனில்
பெரிதான ஆய்வாகவே அது அமைந்தது.
அந்த ஆய்வு அடுத்த கட்டமாகச் சர்வதேசக் குற்றவியல் நீதி விசாரணையைக்
கோரும் என்று நான் எதிர்பார்த்திருந்தேன். ஆனால், அது ஒரு கலப்பு நீதிப்
பொறிமுறையைப் பிரேரித்திருக்கிறது.
கேள்வி: சரி, அந்த ஆய்வில் தமிழர் தரப்புச் சாட்சியங்கள் சரியான முறையில்
முன்வைக்கப்பட்டதா?
பதில்: உண்மையில் பாதிக்கப்பட்ட மக்கள் நேரடியாக சாட்சியங்களை
வழங்குமளவுக்கு முடியாத சூழல் இலங்கைத் தீவில் கடந்த வருடம் இருந்தது.
அப்போதிருந்த ராஜபக்ச அரசு அதற்கு அனுமதிக்கவில்லை. அதேவேளை சிங்கள
இராணுவப் புலனாய்வு கடும் நெருக்கடிகளைக் கொடுத்துவந்தது.
தாயகத்தில் ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் சாட்சியம் கொடுப்பது தொடர்பான
தெளிவான அறிவும் இருக்கவில்லை.
என்னைச் சிங்களப் புலனாய்வுத் துறையினர் பின்னும் முன்னும்
தொடர்ந்துகொண்டிருந்தார்கள். ஆனாலும், என்னால் முடிந்தவரை மக்களை
சாட்சியம் கொடுக்குமாறு வலியுறுத்தினேன்.
புலம்பெயர் உறவுகள் சிலரின் உதவியோடு சில முக்கியமான சாட்சியங்களை
நானே ஒழுங்குபடுத்திக் கொடுத்திருந்தேன். தவிரவும், நானும் நேரடியாக
ஜெனீவா சென்று எழுத்துமூலமும் வாய்மூலமும் எனது சாட்சியத்தைப் பதிவு
செய்தேன்.
சாட்சியங்களின் தொகையை விடவும், படிவங்களை நிரப்புவது போலவும்
அல்லாமல் கொடுக்கப்படுகின்ற சாட்சியங்கள் வலுவுள்ளதாக அமையவேண்டும்
என்பதையே நான் வலியுறுத்தினேன்.
அதேவேளை ஏதோ படிவங்களை நிரப்பி அனுப்பிவிட்டால் போதும் என்ற
மனப்பான்மையில் சிலர் களத்தில் வேலைசெய்துகொண்டிருந்தார்கள். அதன்
போதாக்குறைகளைப் பகிரங்கமாகச் சுட்டிக்காட்டி மக்களைக் குழப்புவதாகப்
போய்விடக்கூடாது என்றும் என்னால் இயன்றவரை தரமாக, வலுவுள்ள
சாட்சியங்களைப் பதியச் செய்யவேண்டும் என்பதையே எனது குறிக்கோளாகக்
கொண்டு நான் இயங்கினேன்.
உண்மையில் எமக்கிருந்த நெருக்கடிக்கு மத்தியில் வழங்கப்பட்டிருந்த கால
அவகாசம் போதாது இருந்தது.
மார்ச் 2014 இல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஓகஸ்ட் 2014 இன்
ஆரம்பத்திலேயே உயர்ஸ்தானிகரின் அலுவலகம் சாட்சியங்களைச்
சமர்ப்பிப்பதற்கான அதிகாரபூர்வ அறிவித்தலை வெளியிட்டது. மிகவும் குறைந்த
மூன்று மாதங்களே எமக்குத் தரப்பட்டது. ஒக்ரோபர் 30ம் திகதி நள்ளிரவுக்கு
முன்னர் சாட்சியங்களை மின்னஞ்சலில் அனுப்பிவைக்குமாறு
கோரியிருந்தார்கள். அதைப்போல 30ம் நள்ளிரவுடன் அதை
முடித்துக்கொண்டார்கள்.
குறித்த கால எல்லையின் முடிவில், சாட்சியங்களை வழங்குவதற்கான கால
எல்லையை நீடிக்குமாறு நான் மனித உரிமை உயர் ஸ்தானிகரின்
அலுவலகத்துக்கு பகிரங்கமான வேண்டுதலைக் கூட விடுத்திருந்தேன். ஆனால்
அந்த நியாயமான வேண்டுகோள் விழலுக்கு இறைத்த நீராகியது. கால
எல்லையை அவர்கள் நீடிக்கவில்லை. இந்தச் சம்பவம் ஒரு வரலாற்றுப்
பதிவாகும். ஏனென்றால், பின்னாளில் இலங்கை அரசுக்கு அனுசரணையாக
அறிக்கையை வெளியிடுவதற்கு ஆறுமாதங்கள் தாமதிக்கிறார்கள்.
இருந்த கால அவகாசத்துக்குள் கொடுக்கப்பட்ட சாட்சியங்களின் தரம் போதாது
என்பதே எனது கருத்து. ஏனென்றால், அதைச் செய்யவேண்டிய தமிழரின்
அரசியல் தரப்புகளும் வேண்டுமென்றே தூங்கிக்கொண்டிருந்தார்கள். ஏதோ,
சாட்சியத்தைக் கொடுக்குமாறு தாங்கள் சொன்னால், சாட்சியங்களை
வலிந்துகொடுத்ததாகிவிடும் என்பது போன்ற கருத்தை அவர்கள்
கொண்டிருந்தார்கள்.
கேள்வி: ஏன் தமிழ் அரசியல் தலைமை அதைச் செய்யவில்லை.
பதில்: சர்வதேச விசாரணை நோக்கிய கோரிக்கை வலுவடையக்கூடாது என்று
கருதும் சில விதண்டாவாதிகள் தமிழர் அரசியலைத் தமது கையகப்படுத்தி, எம்
போன்றவர்களை ஓரம்கட்டி நடாத்திய கேவலமான அரசியலே உள்ளுக்கு
ஓடிக்கொண்டிருந்தது.
இன்னொருமுனையில் வட மாகாண சபைக்கு ஊடாக என் போன்றவர்கள்,
குறிப்பாக திரு சிவாஜிலிங்கம் அவர்களின் முனைப்போடு, போராடினோம்.
அதிலே வெற்றியும் கண்டோம்.
கேள்வி: எந்தவகையில்?
பதில்: இன அழிப்புக்கான விசாரணையைக் கோரிய தீர்மானத்தை உரிய
தருணத்தில் நிறைவேற்றுவதற்கான சூழலை உருவாக்கினோம். நாம் வைத்த
கோரிக்கையை விடவும் விதண்டாவாதிகளின் அரசியல் நாடகங்கள்
முதலமைச்சரை விழிப்புறச் செய்தது. இதன் விளைவாக வரலாற்று
முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் நிறைவேறியது.
கேள்வி: சரி, மனித உரிமை உயர் ஸ்தானிகர் ஆய்வுஅறிக்கையை தாமதித்து
வெளியிடும் தறுவாயில் மேலதிகமாக சாட்சிகளை வழங்கும் சூழல் தமிழ்
மக்களுக்கு இருக்கவில்லையா?
பதில்: உண்மையில் மனித உரிமை உயர்ஸ்தானிகரின் அதிகாரிகள் இலங்கைக்கு
வந்திருக்கவேண்டும். ஆனால், அவர்கள் அதைச் செய்யவில்லை. அவர்களுக்கு
கொழும்பில் ஏற்படவேண்டிய அரசியல் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு
பதுங்கும் தேவையே இருந்தது. காலத்தை வீணடித்தார்கள்.
பாதிக்கப்பட்டவர்களை முன்னிலைப்படுத்தவில்லை. மனித உரிமை எல்லாம்
பேச்சளவில் மட்டுமே இருந்தது. அரசுகளின் உரிமையே முன்னுக்கு நின்றது.
சாட்சியங்கள் சிலவற்றை புதிய அரசாங்கம் தரும் என்றுகூட தங்கள் கால
தாமதத்தை நியாயப்படுத்த விழைந்தார்கள். ஆனால், பாதிக்கப்பட்ட மக்களை
புதிதாகச் சாட்சியங்களை வழங்க முன்வருமாறு கூறவில்லை. ஏனென்றால்
அறிக்கை முன்கூட்டியே தயாராகிவிட்டது என்றார்கள். உண்மையில் அவர்களின்
சில கூற்றுக்கள் ஒன்றுக்கொன்று முரணானதாக இருந்தது. இதை வரலாற்றைப்
பின்னோக்கி ஆராய்ந்து பார்க்கும் வலுவுள்ள சில ஊடகங்களால் மட்டுமே
புரிந்துகொள்ளமுடியும். வெறுமனே செய்திகளை ஒப்புவிக்கும் பல
ஊடகங்களால் இதைப் புரிந்துகொள்ளமுடியாது.
கேள்வி: அந்த அறிக்கையை நீங்கள் வரவேற்கிறீர்களா?
பதில்: அந்த அறிக்கையை நாம் ஆரத்தழுவி வரவேற்கவும் இயலாது.
அதேவேளை அதை சிங்களத் தீவிரவாதிகள் போல கண்டிக்கவும் இயலாது. அதன்
பிரேரணை கலப்பு நீதி மன்றம் என்பது எனக்கு ஆழ்ந்த அதிருப்தியைத்தான்
தந்திருக்கிறது.
கேள்வி: அப்படியானால் அதை வரவேற்ற தமி;ழ்த் தரப்புகள் பற்றி நீங்கள் என்ன
நினைக்கிறீர்கள்?
பதில்: விதண்டாவாதிகளும் விசயம் புரியாதவர்களும் இன அழிப்பின் வலி
தெரியாதவர்களும் வரவேற்பு நாடகத்தில் ஈடுபட்டார்கள். அவர்களைப் பற்றி
நினைத்து எமது முயற்சியையும் நேரத்தையும் வீணடிக்க நான் இனிமேலும்
விரும்பவில்லை.
கேள்வி: சர்வதேச சமுகத்தில் ஏதாவது ஒரு நாடாயினும் நீங்கள் சொல்லும்
கருத்தை ஏற்றுக்கொள்கிறதா? 25 நாடுகள் இந்த உள்ளக விசாரணையை
ஆதரிக்கும் பாணியிலான தீர்மானத்தைத் தானே ஏகமனதாக
அங்கீகிரித்திருக்கின்றன?
பதில்: சர்வதேச சமுகத்தில் எமது சிக்கலை ஆழமாக விளங்கியவர்கள்
இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அதைப் பகிரங்கமாக ஒப்புக்கொள்ள இது வரை
தயாராகவில்லை. ஏனென்றால் ஐ.நா.சபைக்குள் நடாத்தப்பட்டுக்கொண்டிருப்பது
அரசுகளுக்குச் சார்பான அரசியலே. ஆனால், அதற்காக எமது கருத்தும்
நிலைப்பாடும் எடுபடவில்லை என்ற முடிவுக்கு வரக்கூடாது.
முதலில், 2009 போர் இன அழிப்புக்கூடாக முடிவடைந்த தறுவாயில் இதே ஐ.நா.
மனித உரிமைச் சபைதான் இலங்கை அரசு போரை முடித்த விதத்தை
வரவேற்றுத் தீர்மானம் நிறைவேற்றியது என்பதை நாம் மறக்கக்கூடாது. இது
ஐ.நா. சபையின் வரலாற்றிலேயே ஒரு கறுப்புப் புள்ளி. இதைப்போலத்தான்
பின்னர் இலங்கை அரசை அதன் சீனச் சார்புப் போக்கில் இருந்து தமது பிடிக்குள்
கொண்டுவருவதற்கு அமெரிக்கா ஜெனீவா மனித உரிமைச் சபையைப்
பயன்படுத்தியது. இதன் முடிவு எப்படியாக அமைந்திருக்கிறது என்பதற்கு
தற்போதைய உள்ளக விசாரணை குறித்த போக்கும் இலங்கையும் அமெரிக்காவும்
ஒன்றாகச் சேர்ந்து தீர்மானம் நிறைவேற்றியதையும் நாங்கள்
விளங்கிக்கொள்ளவேண்டும்.
குறிப்பாக, பாலஸ்தீனியர்களின் சிக்கலில் சர்வதேசத்தில் பல நாடுகள்
அவர்களுக்குத் தனிநாடே தீர்வு என்று வாக்களித்துள்ளன. ஆனால், அமெரிக்கா
அதை விரும்பவில்லை. அமெரிக்கா முன்வைக்கும் திட்டங்களுக்கெல்லாம்
பாலஸ்தீனியர்கள் வரவேற்பு விட்டு அதற்குப் பின்னால் செல்லவில்லை.
பாலஸ்தீனியர்கள் தமது கோரிக்கையைக் கைவிடாது கொள்கையின்பாற்பட்டுத்
தொடர்ந்தும் தமது கருத்தில விடாப்பிடியாக இருந்துவருகிறார்கள்.
அமெரிக்காவுக்கு உள்ளும் புறமும் பாலஸ்தீனியர்களின் குரல் ஓங்கி ஒலிக்கிறது.
ஐ.நா.வில் நாம் ஒரு மக்கள் சமுதாயமாக அடிக்கு மேல் அடி அடித்தால் சர்வதேச
அபிப்பிராயம் எமக்குச் சார்பாக மாறும் என்பதற்கு பாலஸ்தீனிய விவகாரமே ஒரு
உதாரணம். அமெரிக்க அரசின் நிலைப்பாட்டுக்குத் தகுந்தமாதிரியெல்லாம் நாம்
தலையாட்டும் பொம்மைகளாக இருப்பது சாணக்கியமான தமிழர் அரசியல்
அல்ல என்பதை முதலில் தமிழர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
அமெரிக்காவின் கொள்கை நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லாதபோதும் என்
போன்றவர்கள் அமெரிக்க அரச தரப்பு பிரதிநிகளிடமும் எமது கருத்தை
துணிச்சலாக முன்வைக்கும் நிலையிலேயே இருக்கிறோம். உண்மையில்
சொல்லப்போனால், நாம் என்ன நிலைப்பாடு எடுக்கிறோம் என்பதை அவர்கள் மிக
உன்னிப்பாக அவதானித்து வருகிறார்கள். இவர்களில் பலர் தனிப்பட்ட
மனிதர்களாக புரிந்துணர்வு கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்களின்
புரிந்துணர்வு வேறு, அமெரிக்காவின் அரசு ரீதியான இலங்கையுடனான
புரிந்துணர்வு வேறு. இந்த நிலைப்பாடு தான் பாலஸ்தீனியரின் சிக்கலிலும்
இருந்துவருகிறது. ஆகவே, எமது பாதையில் நாம் உறுதியாக இருக்கவேண்டும்.
கேள்வி: பாலஸ்தீனியர்களுக்கு பெருவாரியான ஆதரவு சர்வதேச சமுகத்தில்
இருந்துவருகிறது. ஆனால் எமக்கு அவ்வாறான சூழல் இல்லையே?
பதில்: பாலஸ்தீனியர்களுக்கு இருக்கும் ஆதரவு வெளிப்படையாகத் தெரிகிறது.
அதை மேலும் ஓங்கச் செய்யும் செயற்பாட்டில் அவர்கள் தெளிவாகவே
இயங்கிவருகிறார்கள். நாமும் அவ்வாறுதான் செயற்படவேண்டும்.
பாலஸ்தீனர்களைப் போலத்தான் எமக்கும் ஒரு புலம்பெயர் சமுகம் இருக்கிறது.
உலகளாவிய தமிழர், குறிப்பாக தமிழகம், தமிழகத்தைச் சார்ந்து உலகெங்கும்
பரவியோர். மலேசியா மூன்றாவது அதிக தொகையில் தமிழ் மக்களைத்
தன்னகத்தே கொண்ட ஒரு நாடு. இதைப் போல பல நாடுகளில் தமிழர்கள்
வாழ்ந்து வருகிறார்கள். இதுவே ஈழத்தமிழர்களுக்கு இன்று இருக்கும் ஒரே ஒரு
பலம்.
பாலஸ்தீனர்களுக்கும் எமக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் அவர்களுக்கு
இருக்கும் அரசுகளின் ஆதரவும் எமக்கு அது இல்லாத தன்மையும். இதையே
உங்கள் கேள்வி சுட்டிக்காட்டுகிறது.
இன்று இஸ்லாமிய மதம் சாராத பல நாடுகளின் தார்மீக அரச ஆதரவை
பாலஸ்தீனர்கள் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழருக்கென்று குரல்கொடுக்கும் அரசு ஒன்றில்லை.
எது எமது பலவீனமோ அதை எமது பலமாக எடுத்துக்கொண்டு
செயற்படவேண்டிய நிலையில நாம் இருக்கிறோம்.
உலகின் நீண்ட நாகரிகங்களாக, இன்றும் உயிர்வாழும் பழைய மொழிகளாக
இருப்பவை சீனம், அரபு, தமிழ் ஆகிய மொழிகளாகும். சீன, அரபு மனித
நாகரிகங்கள் இன்றைய புதிய உலக ஒழுங்கில் பல அரசுகளைக் கொண்ட
சக்திகளாகவோ, அல்லது ஒரு அரசாக இருந்தால்கூட மற்றையவர்களை
ஆட்டிப்படைக்கக்கூடிய பெரும் அரசாகவோ விளங்குகிறார்கள்.
தமிழர்களுக்கு என்று ஒரு நாடில்லை என்பதற்காக உலகளாவிய அரசியலில்
நாம் ஒரு தீர்மானிக்கும் சக்தியாக எம்மைக் கருதக்கூடாது என்று நினைப்பது
அடிப்படையில் மனித குலத்தின் தகைமைக்கே முரணானது.
எமது பலம், நாமும் சீனர்களைப் போலவும் அரேபியர்கள் போலவும் உலகில்
இன்றும் உயிர்வாழும் மக்கள் சமுகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதே.
தோல்விநிலைப்பட்டுச் சீpந்திப்பதையும் ஆதிக்க சக்திகளின் ஏவல்களாக எம்மை
நாமே கருதுவதையும் முதலில் நிறுத்திக்கொண்டு, நாம் சிந்திக்கவேண்டும்.
எமது உட்பலத்தை எல்லா நாடுகளும் முட்டுக்கொடுத்து இலங்கை அரசு
அழித்துவிடுவதற்கு காரணமாக இருந்தார்கள். ஆனால், எமது வெளிப்பலம்
உலகெங்கும் வாழும் தமிழ் மொழியின் குழந்தைகளான ஒட்டு மொத்த உலகத்
தமி;ழ்ச் சமுதாயமும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
ஈழத்தமிழர் என்ற தேசிய இனத்திற்கு நடந்த, தொடர்ந்தும் நடைபெறும்
அழிவுகளைத் தடுத்து நிறுத்தி வெற்றிகொள்ளவேண்டிய தார்மீகக் கடமை
உலகளாவிய தமிழ்ச் சமுகத்திற்கு இருக்கிறது. இதையே முள்ளிவாய்க்கால்
உணர்த்தி நிற்கிறது.
நான் முள்ளிவாய்க்காலின் ஒரு குழந்தையாகவே உருவாக்கம்கண்டேன். நான்
அரசியலுக்கு வந்த வழியே அது தான். இந்த அடிப்படையில் நான் உலகெங்கும்
பரந்து வாழும் தமிழர்களுக்குச் சொல்லக்கூடியது செய்தியும் அதை ஒட்டியதே.
ஈழத்தமிழர் விடயத்தில் இலங்கைத் தீவில இருக்கும் தமிழர்களை விடவும்
கூடிய உரிமையோடு செயற்படும் அதிகாரத்தை முள்ளிவாய்க்கால் உலகத்
தமிழர்களுக்கு வழங்கி ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டது. இலங்கைத் தீவின்
பாராளுமன்ற அரசியலோ, வாக்குகளோ எமது அரசியலைத் தீர்மானிக்கும்
சக்திகள் அல்ல. இiவெயல்லாம் எமது குரலை ஏதோ ஒரு அளவுக்கேனும்
உள்ளேயும் வெளியேயும் வெளிப்படுத்தும் ஒரு சில வழிமுறைகளே.
இதை ஓரளவுக்கு நான் அங்கம் வகிக்கும் வடமாகாண சபை இன அழிப்புத்
தீர்மானம் மூலம் நிறைவேற்றியதன் ஊடாகத் தனது கடமையை;
செய்திருக்கிறது.
இதைச் செய்தமையால், இன்று சர்வதேச அரசியலில் இருக்கும் அரச சக்திகளின்
பிரதிநிதிகள் எம்மிடம் வந்து முரண்படும் தொனியில் கதைக்கிறார்கள்.
அவர்களுக்கு எமது முதலமைச்சர் நிதானமாகவும், சாந்தமாகவும், ஆழமாகவும்
பதில் சொல்லிவருகிறார்.
வடமாகாண சபை கொண்டுவந்த தீர்மானத்தின் சர்வதேச முக்கியத்துவத்தை
இன்று நாம் மேலும் தெளிவாகப் புரிந்துகொள்கிறோம். அதை
நிறைவேற்றுவதற்காகச் செயற்பட் உந்துசக்திகளில் ஒன்றாக நானும்
இருந்திருக்கிறேன் என்பது எனக்கு அடிமனதில் ஒரு திருப்தியைத் தந்திருக்கிறது.
இது நாம் செய்யவேண்டிய வேலையின் ஒரு சிறு பகுதியே. இன்னம் நிறைய
இருக்கிறது. அதன் தார்மீகப் பலம் எமது உலகளாவிய தன்மை ஒன்றுதான்.
கேள்வி: ஆனால், தமிழ் அரசியலின் தலைமையில் இருப்போர் உங்களுக்கு
மாறான கருத்தையல்லவா கொண்டிருக்கிறார்கள்?
பதில்: நான் மாகாணசபையில் பெருமளவு வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்டேன்.
எனது தலைமை முதலமைச்சர். அவர் தெளிவாகவே இருக்கிறார். ஆகவே
தெளிவில்லாதவர்கள் வேறெங்கும் இருந்தால் அதற்கு நான் பொறுப்பாளியல்ல.
பாராளுமன்றத்திற்குள் இருப்பவர்கள் தெளிவற்ற செயற்பாட்டில் இருந்தால்
அதற்கு பாராளுமன்றத்தில் இருக்கும் ஒவ்வொரு தமிழ்ப் பாராளுமன்ற
உறுப்பினரும் பொறுப்பாளி.
எமக்கு முன்னால் இருக்கும் பாரிய பொறுப்பை சரியான முறையில் எடுத்துச்
செல்லத் தெரியாதவர்களாக யாரேனும் இருந்தால் கூட பரவாயில்லை. குந்தகம்
விளைவிப்போராக அவர்கள் தொழிற்படுவதுதான் கவலைக்குரியது.
யாராய் இருந்தாலும் மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்றுவிட்டு அதற்கு
எதிராகச் செயற்படுவார்களானால், அவர்களின் உண்மை முகம் மக்களுக்குத்
தெரியவரும்போது அவர்கள் தோற்றுப்போவார்கள். இன்று அப்படியானவர்கள்
தெளிவாகவே தம்மை அடையாளம் காட்டிவருகிறார்கள். பல நாள் திருடன் ஒரு
நாள் பிடிபடுவான் என்பதைப் போன்றது தான் இவர்களின் நிலை.
கேள்வி: அரசியலில் ஈடுபட்டிருப்பவராக அன்றி, தனிப்பட்ட அனந்தியாக உங்கள்
உள்ளிருக்கும் உணர்வு என்ன?
பதில்: இன அழிப்புக்கான நீதி கோராமல் நான் ஓயப்போவதில்லை. எனது
கணவரை என் கண்முன்னால் பறிகொடுத்து இன்றும் அவரை நானும் என்
பிள்ளைகளும் தேடிக்கொண்டிருக்கிறோம். அவர் ஒரு அரசியல் தலைவராக
இருந்தவர். பலராலும் மதிக்கப்பட்டவர். அவரின் வாழ்வின் அர்த்தத்திற்குக்
களங்கம் விளைவிக்க உலகின் எந்தச் சக்தி முயன்றாலும் அதை எதிர்கொள்ளும்
மனத்துணிவை எனக்கு முள்ளிவாய்க்கால் தந்திருக்கிறது.
எனது உணர்வின் மூச்சே என்னைச் செயற்பட வைக்கிறது. நான் உரிமைகளைக்
காற்றில் பறக்கவிட்டு வாய்ப்புக்களைத் தேடும் ஒரு சாதாரண அரசியல்வாதி
அல்ல. எனது உணர்வே என்னை வழிநடத்துகிறது. தேவை ஏற்படும்
போதெல்லாம் வேண்டிய அரசியலை நான் படித்துக்கொள்ளலாம். அதற்கு
உலகளாவிய தமிழ்ச் சமுகம் எனக்குத் துணையிருக்கும் என்ற துணிவு எனக்கு
இருக்கிறது. தனிப்பட்ட யாரையும் நம்பி நான் அரசியலுக்குள் வரவில்லை.
கேள்வி: இன அழிப்புக் குறித்த சர்வதேச விசாரணையை நோக்கிய அடுத்த நகர்வு
என்னவாக இருக்கமுடியும்?
பதில்: சர்வதேச விசாரணை குறித்து எமது அடுத்த நகர்வுகளை வடிவமைக்க
உலகளாவிய தமிழ்ச் சமுகத்தின் சட்ட வல்லுநர்களை, குறிப்பாக புதிய
தலைமுறையிலிருந்து உருவாகியுள்ள சர்வதேச நீதி குறித்த அறிவையும்,
பூகோள அரசியல் சூட்சுமங்களை விளங்கிக்கொள்ளக்கூடிய ஆற்றலுள்ள புதிய
தலைமுறைச் சிந்தனையாளர்களையும், செயற்பாட்டாளார்களையும் ஓரணியில்
திரளச் செய்யவேண்டியதே எமது அடுத்த படியாக இருக்கவேண்டும்.
ஏனென்றால் தேசிய அரசுகள் இல்லாத ஒரு மனித நாகரிகத்தின் குழந்தைகளான
நாம், பல அரசுகளும் இணைந்துகொண்டு எமக்கெதிராக நடாத்திமுடித்த,
தொடர்ந்தும் நடாத்திவரும் அநீதியை சர்வதேசப் பொறிமுறைகளூடாக
மாற்றவேண்டுமானால், அதற்கேற்ற திறமைசாலிகள் எம்மிடையே அணி
வகுக்கவேண்டும்.
இது ஒரு புதிய விதமான அணிவகுப்பு, இதற்குப் புதிய சுவாசம் தேவை. அந்தச்
சுவாசத்திற்காக நாம் அர்த்தமான முறையில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.