இரத்மலான விமான நிலையத்தை உள்நாட்டு பயன்பாட்டிற்கு மட்டுமல்லாது சர்வதேச பயன்பாட்டிற்காகவும் பயன்படுத்துமளவிற்கு பல மாற்றங்கள் செய்யவிருப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை இரத்மலான விமான நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தனியார் விமான உரிமையாளர்கள் தமக்கான விமான கொள்கலன் வசதி தேவை என கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அதற்கான வசதியை இந்த விமான நிலைய வளாகத்திலேயே ஏற்படுத்துவதற்கு தமது அமைச்சு தீர்மானித்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்நாட்டிற்கு ஒருநாளைக்கு மாத்திரம் 50 தொடக்கம் 60 வரையான விமானங்கள் வந்து செல்வதாகவும் இரத்மலான விமானநிலையத்தின் இடவசதியை அதிகரிப்பதன் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் ஏற்படும் இடநெருக்கடியை நிவர்த்தி செய்ய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.