சரிந்துவிட்ட அரசியல் செல்வாக்கை தூக்கி நிறுத்த, இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட போராளிகளுக்கு என்ன நடந்தது என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற இவ்வாண்டுக்கான வரவு செலவு திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,
இறுதி யுத்தத்தின்போது போராளிகள், அவர்களின் உறவினர்களால் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதற்கான ஆதாரங்கள் உள்ளன.
அதேபோன்று இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட போராளிகளின் முழு விபரங்களும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் காணப்பட்டன.
அவரின் ஆட்சிக்காலத்தில் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து நாம் பலமுறை அவர்களை சந்தித்து பேசினோம். அப்போது அவர் முன்னாள் போராளிகள் மற்றும் அரசியல் கைதிகளின் விபரங்கள் குறித்து ஏழிற்கும் மேற்பட்ட கோப்புகளை எங்களிடம் காட்டினார்.
அந்த பட்டியல் தற்போதும் அரசாங்கத்திடம் காணப்படுகின்றதாக நாம் நம்புகின்றோம். எனவே காணாமலாக்கப்பட்டவர்கள் மற்றும் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு என்ன நடந்தது என்பது குறித்து அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.