இராணுவத்தினரை தமிழ் அரசியல் கைதிகளுடன் ஒப்பிட முடியாது : சுமந்திரன்

395

இராணுவ வீரர்களையும், தமிழ் அரசியல் கைதிகளையும் சமமாக ஒப்பிட முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

போர்க்குற்றங்களுடன் தொடர்புடைய இராணுவ வீரர்களுக்கும், முன்னாள் போராளிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார்.

அவரது கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையிலேயே கூட்டமைப்பின் பேச்சாளர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர்,

”தமிழ் அரசியல் கைதிகள் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களது வழக்குகள் தீர்க்கப்படாது இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

ஒப்புதல் வாக்குமூலம் வழங்கப்பட்டதன் பின்னரே அவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான தமிழ் அரசியல் கைதிகளை, பல அட்டூழியங்களை அரங்கேற்றியிருந்த இராணுவ வீரர்களுடன் ஒப்பிட முடியாது.

பொதுமன்னிப்பு வழங்கப்படுவதற்கு முன்னர் செய்த குற்றங்களின் வகையை கண்டுபிடிப்பதற்கு உண்மையை கண்டறிவதற்கான ஒரு பொறிமுறையை கையாள வேண்டும்” எனக் குறிப்பிட்டார்..

SHARE