இராணுவத்தினர் என்ன குற்றம் செய்தாலும் தண்டிக்கக் கூடாது என தெற்கின் சில சமூகங்கள் கருதுவதாக பிரபல மனித உரிமை செயற்பாட்டாளர் ரூகி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்கள் சமூகத்தின் மத்தியில் படையினர் மற்றும் காவல்துறையினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடாது என்ற நிலைப்பாடு புறையோடிப் போயிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இராணுவப் படையினர், காவல்துறையினர் அல்லது முக்கிய பிரபுக்கள் நாட்டின் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
படையினர் என்ன குற்றச் செயலிலும் ஈடுபட முடியம் அவர்களை தண்டிக்கக் கூடாது என்ற சமூகக் கருதுகோள் சிலரிடம் ஆழமாக பதிந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையானது மிகவும் பயங்கரமானதும் ஆபத்தானதுமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இராணுவப் படையினர் தண்டிக்கப்படுவது குறித்து தெற்கு சமூகம் ஆத்திரமடையும் நிலையே காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
படையினருக்கு தண்டனை விக்கப்பட்டால் ஏன் பயங்கரவாதிகளுக்கு தண்டனை விதிக்கப்பட முடியாது என சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
உண்மையில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகளை படையினராக கருத முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் செய்வது அரசாங்கத்திற்கு காணப்படும் உரிமை என்ற போதிலும் யுத்த நியதிகள் விதிகளுக்கு புறம்பான வகையில் செயற்பட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
படையினர், காவல்துறையினர் மற்றும் முக்கிய பிரபுக்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் சட்டம் அமுலாக்கப்படுவதில் கால தாமதம் நிலவி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வழக்குகள் ஒத்தி வைக்கப்படுதல், சட்ட மா அதிபர் திணைக்களத்தின் தாமதம், நீதவான்கள் விடுமுறை எடுத்துச் செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளினால் இவ்வாறான நிலைமை நீடித்து வருவதாக மனித உரிமை செயற்பாட்டாளராக ரூகி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.