இருளில் மூழ்கியுள்ளது மன்னார் பெரியகடை கிராமம்

284
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பெரிய கடை கிராமத்தில் தெரு மின் விளக்குகள் இன்மையினால் குறித்த கிராம மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு அச்ச நிலைக்கும் முகம் கொடுத்து வருவதாக அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

பெரிய கடை கிராமத்தில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.  குறித்த கிராமத்தில் மது விற்பனை நிலையம் ஒன்று அமைந்துள்ளது.

இந்த நிலையில் இரவு நேரங்களில் மது விற்பனை நிலையத்திற்கு வரும் மதுப்பிரியர்கள் மதுபான பொருட்களை வேண்டிக்கொண்டு சென்று இருள் சூழ்ந்து காணப்படும் குறித்த இடங்களில் வைத்து அருந்துகின்றனர்.

இதனால் அப்பகுதி பெண்கள் இரவு நேரங்களில் அவசர தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.

மது விற்பனை நிலையம் அமைந்துள்ள பிரதான வீதியில் மாத்திரம் தெரு மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.

ஆனால் ஏனைய வீதிகளுக்கு மின் விளக்குகள் பொருத்தப்படவில்லை.பல தெரு மின் கம்பங்களில் மின் விளக்குகள் காணப்படுகின்ற போதும் அவை ஒளிர்வதில்லை.

தற்போது பெரிய கடை கிராமத்தில் இரவு நேரத்தில் சந்தேகத்திற்கிடமானவர்களின் நடமாட்டங்களும் அதிகரித்துள்ளதாக தெரிவித்த பெரிய கடை கிராம மக்கள் பல்வேறு திருட்டுச் சம்பவங்களும் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த கிராமத்தில் உள்ள தெரு மின் கம்பங்களில் காணப்படுகின்ற தெரு மின் விளக்குகளை ஒளிரச்செய்ய நடவடிக்கை எடுக்குமாறும், ஏனைய இடங்களில் தெரு மின் விளக்குகளை பொருத்துமாறு பெரியகடை கிராம அலுவலகர் ஊடாக பல தடவைகள் மன்னார் நகர சபையின் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் இது வரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என அக்கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

எனவே மன்னார் பெரிய கடை கிராமத்திற்கு தெரு மின் விளக்குகளை பொருத்தி குறித்த கிராமத்தில் இடம் பெறும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த மன்னார் நகர சபை உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE