கிழக்கு மாகாணசபையில் நியாயம் இல்லாத, அநீதியான ஆட்சியொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. உண்மையான ஆட்சியை நடாத்தவேண்டிய இரண்டு பிரதான கட்சிகளும் குழப்ப நிலையினை ஏற்படுத்தியுள்ளது என முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணசபை அமர்வில் நிதியொதுக்கீடு தொடர்பில் கொண்டு வரப்பட்ட பிரேரணை மீதான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
ஏற்றுக்கொள்ளப்பட்டு அனுமதிக்கப்பட்ட வேலைகளை மாற்றம் செய்திருப்பதுதான் மிகப்பெரிய பிரச்சனையாக நாங்கள் பார்க்கின்றோம்.
எதிர்காலத்தில் எதிர்க்கட்சிக்கு வாய்ப்பளிக்காத வண்ணம் நிதிகளை பங்கீடு செய்வதில் இரண்டு கட்சி உறுப்பினர்களும் சேர்ந்து கவனம் செலுத்தினால் பல பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள முடியும். இந்த அரசியல் மாற்றத்திலே நூற்றி ஐம்பது நாட்களை நெருங்கிய போதுதான் கிழக்கு மாகாணத்தின் எதிர்க்கட்சித் தலைவரை சபாநாயகர் அறிவித்திருக்கின்றார். நாங்கள் எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்க அவர்களை அறிவிக்க காரணம் அவர் நேர்மையான மனிதர்.
2014ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திட்டங்களே 2015ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அவற்றில் மாவட்ட பிரச்சினைகளோ இனவிகிதாசார பிரச்சினைகளோ இல்லை. அதேபோன்று முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை அவர்களின் கடந்த கால ஒதுக்கீடுகளிலும் இனவிகிதாசாரம் பேணப்பட்டது.
2008 ஆம் ஆண்டு தொடக்கம் எந்தவித பிரச்சினையும் இன்றி கிழக்கு மாகாணசபையினை சரியான முறையில் வழிநடாத்தினோம். முன்னுதாரணமாக இந்த மாகாணம் திகழ்ந்தது. ஆனால் 2015ஆம் ஆண்டில் நல்லாட்சி கூறிவந்ததும் கிழக்கு மாகாணசபையில் நியாயம் இல்லாத, அநீதியான ஆட்சியொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. உண்மையான ஆட்சியை நடாத்த வேண்டிய இரண்டு பிரதான கட்சிகளும் குழப்ப நிலையினை ஏற்படுத்தியுள்ளது மிகவும் கவலையளிக்கும் விடயமாகவுள்ளது.
இந்த இடத்தில் உதாரணமாக கூறப்போனால் சுகாதார அமைச்சரின் செயற்பாடுகளை கூறவேண்டும். அவர் இந்த அமர்வுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் வரவில்லை. மட்டக்களப்பு மாவட்டத்துக்கு கொண்டுவரப்பட்ட பல திட்டங்களை அவரது சொந்த ஊரான சம்மாந்துறைக்கு மாற்றியுள்ளார். களுவாஞ்சிகுடிக்கு ஒதுக்கப்பட்ட ஒருகோடி ரூபா நிதியை அப்படியே கொண்டு சென்று சம்மாந்துறையில் கட்டியுள்ளார். கிராமிய வைத்தியசாலைக்கு பராமரிப்புக்கு என ஒதுக்கப்பட்ட 80 இலட்சம் ரூபா நிதியை அப்படியே சம்மாந்துறைக்கு ஒதுக்கியுள்ளார். அதேபோன்று வைத்தியர்களின் கட்டிடத்துக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு கோடி ருபா சம்மாந்துறையில் அவரது வைத்தியசாலைக்கும் ஆயுர்வேத வைத்தியசாலைக்கும் எடுக்கப்பட்டுள்ளது.
அவரது அரசியலை பயன்படுத்தி இன்னுமொரு மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட அபிவிருத்திகளை பிடிங்கிக்கொண்டு சென்று அவரது கிராமத்தினை அபிவிருத்தி செய்து அதனை அரசியலுக்காக பயன்படுத்துவது என்பது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாகும். இது மாவட்ட விகிதாசாரத்தினை பாதிக்கும், அத்துடன் ஒரு இனத்தினை இன்னுமொரு இனம் சந்தேகம் கொண்டுபார்க்கும் நிலையேற்படுகின்றது. இதனை முதலமைச்சரும் அமைச்சரவையுமே பொறுப்பேற்க வேண்டும்.
இந்த மாகாணசபை முன்னுதாரணமான மாகாணசபையாக இயங்க வேண்டுமானால் இதனை மீள்பரிசீலணை செய்ய வேண்டும். கிழக்கு மாகாணசபையினால் முன்மொழியப்பட்ட திட்டங்களை அப்பகுதிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும்.சுகாதார துறையிலேயே இவ்வாறான மோசமான நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
நாங்கள் நியாயமான விடயங்களை சுட்டிக்காட்டும்போது அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் முதலமைச்சர் இந்த மாகாணத்தில் மீண்டும் இரத்தக்களறி ஏற்பட போகின்றது, நாங்கள் கையாலாகாத அரசியல் செய்கின்றோம் என்ற பத்திரிகைகளில் அறிக்கைகளை வெளியிடுகின்றார். நாங்கள் அவ்வாறானவர்கள் அல்ல.
இன்றுள்ள தமிழ் தலைவர்களில் முதுகெழும்புள்ள தலைவராக, மக்கள் நம்பிக்கை கொள்ளும் வகையிலேயே நாங்கள் அரசியல் பணியை மேற்கொண்டு வருகின்றோம்.
தெளிவற்ற விடயங்களை இனகுரோதங்களை கொண்டதான அடிப்படையில் அறிக்கைகளை பத்திரிகைகளில் வெளியிடுவதை முதலமைச்சர் தவிர்த்துக் கொள்ள வேண்டும். நாங்கள் நியாயமான விடயங்களை பேசுகின்றோம். அதனை மறுப்பதாக இருந்தால் அதனை ஆவணங்களுடன் வெளிபடுப்படுத்துங்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் ஒரு நிலைக்கு வரும்போதே எதிர்க்கட்சிக்கு எதுவித வேலையும் இல்லாத நிலையேற்படும். முக்கியமாக 2015ஆம் ஆண்டுவந்துள்ள குளறுபடிகளை இல்லாமல் செய்வதற்கு குழுவொன்றினை அமைக்க வேண்டும். அதற்கு அமைச்சர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இந்த ஆண்டின் நிதி ஆண்டு அரை வருடம் கடந்து விட்டது.1200மில்லியன் ரூபா கிழக்கு மாகாணசபைக்கு ஒதுக்கப்பட்டது. அதில் நூறு மில்லியன் ரூபாதான் வந்து சேர்ந்துள்ளது. தற்போதைய நாட்டின் நிதியமைச்சர் தேவையான பணம் உள்ளது என்கிறார். இந்த நாட்டில் உள்ள மக்களை ஏமாற்றும் நல்லாட்சியே இங்கு நடைபெற்று வருகின்றது.
ஆகவே கிழக்கு மாகாணசபையில் இனங்களிடையே நல்லிணக்கத்தினை உறுதிப்படுத்தும் வகையிலும் வெளிப்படைத்தன்மையுடனும் ஆட்சி நடைபெற வேண்டும். இங்கு ஏற்படும் பலவீனத்துக்கு அடிப்படை காரணம் அமைச்சரவையில் இணைந்து செயற்படாத தன்மையும் நெருக்கமான கருத்துப்பரிமாற்றமும் வெளிபடுத்தன்மையும் தோன்றாமையே காரணமாகும். நான் இங்கு குறிப்பிட்ட குற்றசாட்டுகளுக்கு ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றது எனத் தெரிவித்துள்ளார்.