நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா விளையாட மாட்டார் எனத் தெரிகிறது.
மலிங்கா முழங்கால் வலியால் தொடர்ந்து அவதிப்பட்டு வருவதால் நியூசிலாந்து எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை அணியின் மேலாளர் ஜெரி வோயுட்டர்ஸ் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் மீதமுள்ள ஒருநாள் போட்டியிலும், டி20 தொடரிலும் அவர் பங்கேற்க முடியாத சூழல் உருவாகலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 2 முன்னணி வீரர்கள் அணியில் இடம்பெறவில்லை. குஷால் பெரேராவுக்கு ஊக்கமருந்து சோதனையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல் தமிங்க பிரசாத் காயம் காரணமாக விலகியுள்ளார்.
தற்போது மலிங்காவும் ஒருநாள் தொடரில் இருந்து விலகி இருப்பதால் அந்த அணிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
ஏற்கனவே டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் பறிகொடுத்த இலங்கை, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் களமிறங்குகிறது.