இலங்கைக்கு இருநாள் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, 25 வருடங்களுக்குப் பின்னர் தலைமன்னாருக்கான ரயில் சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்தார். இந்திய அரசின் உதவியுடன் மதவாச்சியிலிருந்து தலைமன்னாருக்கான ரயில் பாதைப் புனரமைப்பு இடம்பெற்று இந்த சேவை இன்று சனிக்கிழமை நண்பகல் 12:30 மணியளவில் வைபவரீதியாக ஆரம்பித்துவைத்தார். இன்று காலை தலைமன்னார் வந்திருந்த இந்திய பிரதமருக்கு பிரமாண்டமான வரேவேற்பு வழங்கப்பட்டது.
இதன் பின் வைபவரீதியாக கொடி அசைத்து அவர் ரயில் சேவையை ஆரம்பித்துவைத்தார். இந்த நிகழ்வின்போது வடக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், மீனவர் பிரச்சினைகள், அரசியல் தீர்வு குறித்த விடயங்களை வலியுறுத்தி இந்தியப் பிரதமர் மோடிக்கு மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது. இந்த மனுவை மன்னார் ஆயர் இராயப்பு யோசப், வடக்கு மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் ஆகியோர் கையளித்தனர். இந்நிகழ்வில் மத்திய அரசின் போக்குரத்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, அதன் பிரதி அமைச்சர் எம்.எஸ்.தௌபீக், கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிசாட் பதியூதீன், மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு யோசப், இலங்கைக்கான
இந்திய உயர் ஸ்தானிகர் வை.கே.சின்கா, யாழ். இந்திய துணைதூதுவர் தட்சணாமூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், குனைஸ் பாரூக், முத்தலிபு பாபா பாரூக், வட மாகாண கடற்றொழில் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், மன்னார் மாவட்ட செயலாளர் எம்.வை.எஸ்.தேசபிரிய, மாகாண சபை உறுப்பினர்களான பிறிமுஸ் சிராய்வா, றிப்கான் பதியுதீன், அயூப் அஸ்மின் மற்றும் புகையிரத திணைக்கள உயர் அதிகாரிகள் உட்பட அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். –