இலங்கைச் சிறையில் பசில்! அடுத்தது மகிந்தவா?

334

 

இலங்கைச் சிறையில் பசில்! அடுத்தது மகிந்தவா?
உலக நாடுகள் எவ்வளவோ குரல்கொடுத்தும் செவி சாய்க்காமல், உள்நாட்டுப்போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் உயிரை பலிவாங்கிய நிகழ்கால ஹிட்லர் மகிந்த ராஜபக்ச இன்னும் சில நாட்களில் சிறைக்கம்பிகளை எண்ண இருக்கின்றார்.

இதன் துவக்கமாக அவரது இளைய தம்பி பசில் ராஜபக்ச சிறைக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் அந்நாட்டு இராணுவம் அப்பாவித் தமிழர்களை கண்மண் தெரியாமல் சுட்டுத்தள்ளிது. அப்போது சோனியா தலைமையிலான இந்திய அரசும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை வீழ்த்துவதில் தீவிரமாக இருந்ததால், அதன் ஆதரவு, இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு ஏகமாக இருந்ததது.

இலட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்களின் இறப்பிற்கு பின் போர் முடிந்ததும் ஜனாதிபதி தேர்தலை நடத்தினார் மகிந்த ராஜபக்ச, எப்படியும் சிங்களவர்களின் ஆதரவில் வெற்றி பெற்றுவிடலாம் என மனக்கணக்குப்போட்டார். ஆனால் அது நடக்கவில்லை.

காரணம் தமிழகத்தில் தி.மு.க ஆட்சியில் முதல்வராக கருணாநிதி, துணைமுதல்வராக மகன் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்களாக இன்னொரு மகன் மு.க. அழகிரி, பேரன் தயாநிதிமாறன், எம்.பியாக மகள் கனிமொழி என்று ஒரே குடும்பம் கோலோச்சியது போல் இலங்கையில் ராஜபக்சவின் குடு்பம் பத்தாண்டுகள் கோலோச்சியது.

ஜனாதிபதி மகிந்தவின் தம்பி கோத்தபாய ராஜபக்சவிற்கு பாதுகாப்புச் செயலாளர் பொறுப்பு, இன்னொரு தம்பி பசில் ராஜபக்ச பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என பதவிகளை பங்கு போட்டதுடன் ஊழல்களால் நாட்டையே சூறையாடினார்.

இதனால் சிங்களவர்களின் ஆதரவை இழந்தார் மகிந்த ராஜபக்ச. தமிழர்களும் தங்களது வாக்குகளை வீணாக்கிவிடாமல், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு அளிக்கவே வீழ்ந்தார் மகிந்தர்.

ஆனாலும் மைத்திரிபால சிறிசேனவை குடும்பத்தோடு பிடித்து சிறையில் அடைத்து ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைக்க நினைத்தார். ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசின் ஆதரவு அவருக்குக் கிடைக்கவில்லை. இதனால் வேறு வழியின்றி பதவி விலகினார் மகிந்தர்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானதும் மகிந்தரின் குடும்பத்தினர் மீது எண்ணற்ற குற்றச்சாட்டுக்கள் குவிந்தன. கிட்டத்தட்ட 70ஆயிரம் கோடிகளை வெளிநாட்டில் பதுக்கி வைத்திருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

இலங்கையின் மத்திய வங்கியின் கவர்னராக இருந்த அஜித் ரிவார்டு உதவியுடன் மகிந்தர் வெளிநாடுகளில் பதுக்கி முதலீடுகள் செய்திருப்பதாக கூறப்பட்டது.அதே போல் மகிந்தரின் தம்பிகள், மனைவி மற்றும் மகன்கள் மீதும் ஊழல் புகார்கள் வந்தன.

இதில் மகிந்தரின் இளைய தம்பி பசில் முன்பு அமைச்சராக இருந்த போது ஏழைகளுக்கு வீடு கட்டித் தரும் திட்டத்தில் 7கோடி ரூபாய் ஊழல் செய்ததாக ஒரு குற்றச்சாட்டும் அடங்கும்.

இதை நிதி குற்றப்புலனாய்வு பிரிவு (எப்.சி.ஐ.டி) விசாரணை நடத்தியது. பசில் மீது வேறு பல புகார்களும் எழுந்ததால், ஜனவரியில் மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் வந்ததுமே அமெரிக்காவுக்கு பறந்துவிட்டார்.

அமெரிக்காவில் கிரீன் காட் வைத்திருக்கும் பசில், கடந்த 21ஆம் திகதி கொழும்பு திரும்பினார். மறுநாள் 22ம் திகதி காலை 11 மணிக்கு எப்.சி.ஐ.டீ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

சுமார் 6மணி நேரம் விசாரணை நடத்திய அதிகாரிகள் அவரை மாலையில் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். அவரை மே 5ம் திகதி வரை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் குடேவாலா உத்திரவிட்டார்.

இப்போது சிறை கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கிறார் பசில்.

இதற்கிடையே, மகிந்தரின் குடும்பத்தினர் ஊழல் மற்றும் முறைகேடாக குவித்துள்ள சொத்துக்கள் குறித்து விசாரிக்க வேண்டுமென லஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவிடம் ஜே.வி.பி. கட்சியினர் ஓரிரு மாதங்களுக்கு முன்பே புகார் கொடுத்திருந்தனர்.

இந்த புகார்களை அந்த ஆணையம் விசாரிக்க தொடங்கியிருக்கிறது. மகிந்தவிடம் விசாரிப்பதற்காக சம்மன் அனுப்பிய போது அவரது ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மகிந்தவுக்கு ஆதரவாக எம்பிக்களிடம் கையெழுத்து வேட்டையை சிலர் நடத்தினர். இதன் பின் மகிந்தவின் வீட்டிற்கே சென்று அவரிடம் விசாரணை நடத்த ஆணையம் முடிவெடுத்திருக்கிறது.

இந்நிலையில்,மகிந்தவின் இன்னொரு தம்பி கோத்தபாய ராஜபக்சவுக்கும் லஞ்ச,ஊழல் தடுப்பு ஆணையம் சம்மன் அனுப்பியது. உடனே ஆணையத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக மகிந்தரின் ஆதரவாளர்கள் அறிவித்தார்கள்.

இதற்கு கொழும்பு நீதிமன்றம் தடைவிதித்தது. கோத்தபாய மீது விரைவில் வழக்குப் பாயலாம் என்றும் அவரும் கைது செய்யப்படுவார் என்றும் இலங்கையில் பரபரப்பாக பேசப்படுகின்றது.

மகிந்தவின் தலைமை உதவியாளராக இருந்த காமினி சேனரத் மட்டுமே 81 வங்கி கணக்குகள் வைத்திருக்கிறார்.அவற்றையும் அவரது சொத்துக்களையும் சோதனையிடுவதற்கு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கடந்த 22ம் திகதி அனுமதியளித்துள்ளது.

எனவே மகிந்த ராஜபக்ச மீதான விசாரணைக்குப் பின் அவரும் சிறைக்கு செல்லவேண்டியிருக்கும் என்கிறார்கள் விசாரணை அதிகாரிகள்.

இந்த சூழ்நிலையில் எம்பிக்கள் ஆதரவுடன் தனது கழுத்துக்கு வரும் கத்தியைத் தடுத்துவிடலாம் என மகிந்தர் கருதுகின்றார். ஆனால் ஊழல் குற்றச்சாட்டுக்கள் நிரூபணமாகும் போது அவர் சிறைக்குச் செல்வதை யாராலும் தடுக்க முடியாது என்கிறார்கள் இலங்கை அதிகாரிகள்.

SHARE