கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மற்றும் சிங்கள மாணவர்களுக்கிடையில் மோதல்!!

1123

இலங்கையின் இடம்பெற்ற மோதலில் தமிழ் மாணவர்கள் 7 பேரும் சிங்கள மாணவர்கள் 3 பேரும் என 10 மாணவர்கள் காயமடைந்து அரசாங்க மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்திலுள்ள விடுதியில் நேற்று நள்ளிரவு இந்த மாணவர்களுக்கிடையிலான மோதல் இடம்பெற்றுள்ளதாக சம்பவம் தொடர்பாக விசாரணைகளை நடத்திவரும் காவல்துறை கூறுகின்றது.

கடந்த வெள்ளிக்கிழமை வளாகத்தில் நடந்த மாணவர்களுக்கு இடையிலான கூடைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியின் போது மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட முறுகல் நிலையின் எதிரொலியாகவே இந்த கோஷ்டி மோதல் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்றது.

நேற்றிரவு தமது விடுதியில் மாணவரொருவரின் பிறந்தநாள் வைபம் நடைபெற்றுக் கொண்டிருந்தவேளை விடுதிக்குள் அத்து மீறிய சிங்கள மாணவர்கள் குழுவொன்று தங்கள் மீது தாக்குதலை நடத்தியதாக காயமடைந்த தமிழ் மாணவர்கள் கூறுகின்றார்கள்.

தமிழ் மாணவர்கள் தங்கள் மீது திட்டமிட்டே இந்தத் தாக்குதலை நடத்தியதாக காயமடைந்த சிங்கள மாணவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

இந்த சம்பவத்தையடுத்து கிழக்கு பல்கலைக்கழக வந்தாறுமுலை வளாகத்தில் இன்று விரிவுரைகள் பாதிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் வளாக முன்றலிலும் வளாகத்திற்கு வெளியேயும் கூட்டம் கூட்டமாக கூடி நிற்பதை காணமுடிவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்துடன் தொடர்பு கொண்ட போது நிர்வாக ரீதியாக விசாரணைகள் தற்போது நடைபெற்று வருவதாகப் பதிலளிக்கப்பட்டது.

 

SHARE