இலங்கையின் பாதுகாப்பு உபகரணங்களை தரமுயர்த்துவது பற்றி ஆராய இந்திய இராணுவதளபதி இலங்கை செல்லவுள்ளார்:

360

இலங்கையின் பாதுகாப்பு உபகரணங்களை தரமுயர்த்துவதற்கு உதவுமாறு அரசாங்கம் இந்தியாவிடம் விடுத்த வேண்டுகோள் குறித்து ஆராய்வதற்காக இந்திய இராணுவதளபதி ஜெனரல் டல்பீர் சிங் ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இந்திய இராணுவதளபதி தனது ஐந்துநாள் விஜயத்தின்போது இலங்கையின் போர்விமானங்கள், டாங்கிகள் போன்ற யுத்த தளபாடங்களை தரமுயர்த்துவது குறித்த பேச்சுக்களை மேற்கொள்வார் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கை மீது அதிகரித்து வந்த சீனாவின் செல்வாக்கை கட்டுப்படுத்தும் ஓரு முயற்சியாகவே இது இடம்பெறுவதாக இந்திய செய்தித் தாளொன்று தெரிவித்துள்ளது.
தனது போர்தளபாடங்களை தரமுயர்த்துமாறு இலங்கை விடுத்துள்ள வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்படுமாயின் உள்நாட்டு அரசியல் அழுத்தங்கள் காரணமாக இலங்கைக்கு ஆயுதங்களை வழங்குவதில்லை என்ற புதுடில்லியின் நிலைப்பாட்டில் பாரியமாற்றங்கள் ஏற்படலாம் என இந்திய பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து தீவிரமாக ஆராயப்படுவதாக இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழ்நாட்டின் அரசியல் அழுத்தங்கள் காரணமாக இலங்கைக்கு ஆயதங்களை வழங்குவதில்லை என்ற இந்தியாவின் நிலைப்பாட்டினை பயன்படுத்தி சீனா இலங்கைக்கு நெருக்கமாகி உள்ளமை புதடில்லி வட்டாரங்களில் அமைதியின்மையை ஏற்படுத்தி உள்ளதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கைக்கான தனது விஜயத்தின் மூலம் இந்திய இராணுவ தளபதி தனது முதலாவது போர்க்களித்திற்கு மீண்டும் செல்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்திய இராணுவத்தளபதியின் அணியே முதலில் இலங்கையில் மோதலில் ஈடுபட்டதாகவும் அதன் கட்டளைதளபதி உட்பட 20 ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

SHARE