இலங்கையில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு நீதி வேண்டி இன்று முருகதாசன் திடலில் பெருந்திரளான மக்களின் பங்களிப்போடு உணர்வுபூர்வமாக பேரணி நடைபெற்று வருகிறது.
கடந்த 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கான தகுந்த ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றும் இன்று வரை சர்வதேசம் மௌனம் காத்து வருவதோடு, இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றும் செயற்பாடுகளிலும் பல்வேறு நாடுகளும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் கடந்த 2013ம் ஆண்டு இரண்டு அம்சக் கோரிக்கையினை முன்வைத்து மாணவர்கள் தமிழகத்தில் எழுச்சிப் பேரணியினை நடத்தியிருந்தனர்.
அதில் தனித் தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரியும், ஈழத்தில் நடந்த இனவழிப்பிற்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையினை மாணவர்கள் முன்வைத்திருந்தனர்.
ஆனால் இன்றுவரை அழிக்கப்பட்ட ஒரு இனத்திற்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க சர்வதேசம் பின் நிற்கிறது. இந்நிலையிலேயே இன்று முருகதாசன் திடலில் இந்த பேரணி நடைபெற்று வருகின்றது.
முன்னதாக ஜெனீவா பிரதான புகையிரத நிலையத்திற்கு அண்மையில் உள்ள திடலில் ஆரம்பமான இந்த பேரணி முருகதாசன் திடலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது.
ஆயிரக்கணக்கான ஈழ ஆதரவாளர்களும், மக்களும் ஒன்றிணைந்து இந்த பேரணியை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டாம் இடைப்பு
முருகதாசன் திடலை வந்தடைந்த பேரணி
பெருந்திரளான மக்களின் பங்களிப்போடு ஈழத்தில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கான நீதியினை வேண்டி ஐ.நா நோக்கிய பேரணி தற்பொழுது முருகதாசன் திடலை வந்தடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸாரின் பலத்த பாதுகாப்போடு நடைபெற்றுவரும் இந்தப் பேரணியில் தமிழக ஈழ ஆதரவாளர்களும் இணைந்து கொண்டுள்ளனர்.