இலங்கையில் நீண்டகாலமாக நீடிக்கும் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் தொடர்ச்சியாகப் பேச இணக்கம்

360

 

இலங்கையில் நீண்டகாலமாக நீடிக்கும் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் தொடர்ச்சியாகப் பேச இணக்கம் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கிடையேயான சந்திப்பு இன்று புதன்கிழமை நண்பகல் நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போதே ஜனாதிபதி இந்த வாக்குறுதியை அளித்தார். இச்சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கலந்துகொண்டார்.

photo 5454de

 

கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, ம.ஆ.சுமந்திரன், பொன் செல்வராசா, செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர். இந்தச் சந்திப்புக் குறித்து கூட்டமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு: ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடம்பெற்ற இச்சந்திப்பில் நிரந்தர அரசியல் தீர்வொன்றை அடைவதற்கு எடுக்கவேண்டிய முயற்சிகள் குறித்துப் பேசப்பட்டது.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடையக்கூடியதும் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடியதுமான அரசியல் தீர்வை அடைவதற்கான பொறிமுறைகளும் மற்றைய தேவைகளுக்கான நடவடிக்கைகளும் சம்பந்தமாக உரையாடப்பட்டது. வடக்கு கிழக்கில் மக்கள் எதிர்நோக்கும் முக்கியமான சில பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்டது. குறிப்பாக, பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோர் தொடர்பாக எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கைகள், பழைய போராளிகள் நாட்டிற்கு திரும்பும் போது கைது செய்யப்படுகின்றமை, பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் என்பவற்றோடு விடுவிக்கப்படுவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டும் இன்னமும் நடைமுறைப்படுத்தப்படாத காணி தொடர்பான விடயங்களும் பேசப்பட்டன. இவை சம்பந்தமாக துரித நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும் தொடர்ச்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்போடு இவ்வுரையாடல்களை நடத்துவதாகவும் ஜனாதிபதி வாக்குறுதியளித்தார்-

SHARE