இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்படுவோரின் எண்ணிக்கையில் உயர்வு நிலை பதிவாகியுள்ளது.
மரண தண்டனை விதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்வடைந்து செல்வதாக சிறைச்சாலை திணைக்களப் பேச்சாளர் துசார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலை புள்ளி விபரத் தகவல்களின் மூலம் இந்த விடயம் தெளிவாகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
2010ம் ஆண்டில் 96 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் 2015ம் ஆண்டில் 186 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட இவ்வாறான 1060 பேர் வரையில் வெலிக்கடை உள்ளிட்ட சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மொத்த சிறைக் கைதிகளின் எண்ணிக்கையில் 18 வீதமானவர்கள் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளாவர். இவர்களில் நான்கு வீதமானவர்கள் பெண்களாவர்.
மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் கொலை மற்றும் போதைப்பொருள் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களாவர்.
இவர்களில் சிலர் உயர்கல்வித் தகமைகளைக் கொண்டவர்கள் எனவும் சிலர் மிகவும் குறைந்த கல்வித் தகமை உடையவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.