இலங்கையின் சனத் தொகையில் 33.55 வீதமான 7 மில்லியன் சிறுவர்களில் 5 இல் ஒரு வீதத்தினர் வறுமையில் வாடுவதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்துள்ளார்.
இதனால், இந்த சிறுவர்கள் குறித்து கூடிய கவனத்தை செலுத்தி அவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனை தன்னால் மாத்திரம் தனித்து மேற்கொள்ள முடியாது எனவும் நாட்டின் மூத்த குடிகள் அனைவரும் ஒன்றாக கைகோர்த்து இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில், 15 முதல் 19 வயதுக்குட்பட்ட பிள்ளைகளில் சுமார் இரண்டு லட்சம் பேர் சிறுவர் தொழிலாளிகள்.
பெற்றோர் தமது பிள்ளைகள் குறித்து கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன் பிள்ளைகளுக்கு கல்வியையும் போஷாக்கையும் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.