இலங்கை அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் அதிரடியில் மிரட்டிய நியூசிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.நியூசிலாந்து 250 பந்துகள் மீதமுள்ள நிலையில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அதிக பந்துகள் மீதமுள்ள நிலையில் வெற்றி பெற்ற அணிகள் வரிசையில் 7வது இடம் பிடித்தது.
மேலும், 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது ஒருநாள் அரங்கில் இது 48வது முறையாகும். நியூசிலாந்து 8 முறை 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கிறிஸ்ட்சர்ச்சில் நடந்த இந்தப் போட்டியில் நியூசிலாந்து 39 பந்தில் 100 ஓட்டங்களை கடந்தது. இதன் மூலம் 2002ம் ஆண்டுக்கு பின் குறைந்த பந்தில் 100 ஓட்டங்கள் எடுத்த அணிகளின் பட்டியலில் சொந்த சாதனையை முறியடித்தது. இந்தப் போட்டியில் குப்தில் இலங்கை அணியின் பந்துவீச்சை பிரித்து மேய்ந்தார். இதனால் 30 பந்துகளில் 93 ஓட்டங்கள் (8 சிக்சர், 9 பவுண்டரி) எடுத்தார். அரைசதத்தை 17 பந்தில் எடுத்தார். இதன் மூலம் அதிவேக அரைசதம் (17 பந்து) அடித்த 2வது வீரர் என்ற சாதனையை படைத்தார். இலங்கை வீரர்கள் ஜெயசூரியா, குஷால் பெரேரா ஆகியோரும் 17 பந்தில் அரைசதம் அடித்துள்ளனர். முன்னதாக டிவில்லியர்ஸ் 16 பந்தில் அரை சதம் அடித்ததே சாதனையாக உள்ளது. இதை முறியடிக்க குப்திலுக்கு நல்ல வாய்ப்பு இருந்தது. ஆனால் தவறவிட்டு விட்டார். |