தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை செய்கின்ற செயற்பாடுகளை ஏற்றுக் கொள்வதாகவும் அதனை அங்கீகரிப்பதாகவும் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வவுனியா, குருமன்காடு, லக்சுமி திருமண மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை.சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்திலேயே இத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இத் தீர்மானங்கள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த தமிழரசுக் கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் தெரிவித்ததாவது:- இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னரான அரசியல் சூழ்நிலையின் நிலைமையை ஆராய்ந்து தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவினால் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதன் படி இந்த புதிய அரசாங்கம் தமிழர்களின் காணிகளை மீள கையளித்தல் வேண்டும், அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும், காணாமல் போனோர் சம்பந்தமான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு தேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு அரசை வலியுறுத்துகின்றது. அத்துடன் போர் சூழலில் இடம்பெயர்ந்த ஒவ்வொருவரையும் அவரவர் சொந்த இடங்களில் மீள் குடியேற்றும் வகையில் செயற்பட வேண்டும் என அரசை வற்புறுத்துகின்றது. இனப்பிரச்சனை தீர்வு சம்பந்தமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு தொடர்பில் புதிய அரசு தாமதமின்றி உரிய நடவடிக்கையை ஆரம்பிக்க வேண்டும். இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய ஆட்சி மாற்றத்தின் பின் தமிழ் தேசியக்கூட்டமைப்பு மேற்கொள்கின்ற நடவடிக்கைகளை தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு அங்கீகரித்து ஏற்றுக்கொள்கின்றது எனவும் மத்திய குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இக் கூட்டத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவருமான இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் யாழ்மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரனுக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்க இருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைராசா கூறியமை தொடர்பில் EPRLF செயலாளர் நாயகம் சுரேஸ்பிரேமச்சந்திரன் தொலைபேசியூடாக தினப்புயல் இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வி