அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த நர்கிஸ் பக்ரி தற்போது மும்பையில் தங்கி இருந்து இந்தி படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இலங்கை பிரச்சினையை மையமாக வைத்து தயாரான மெட்ராஸ் கபே இந்தி படத்தில் ஜான் அபிரகாமுடன் நடித்து இருந்தார். ராக் ஸ்டார், மெயின் தேரா ஹீரோ, ஹவுஸ்புல்-3 உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். தமிழில் பிரஷாந்துடன் ‘சாகசம்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார்.
நர்கிஸ் பக்ரியிடம் போலி கிரெடிட் கார்டு மூலம் நூதன மோசடி நடந்துள்ளது. நர்கிஸ் பக்ரியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி அமெரிக்காவில் உள்ள வங்கி ஏ.டி.எம்.களில் டாலர்களை எடுத்துள்ளனர். இது அவரது மொபைல் போனுக்கு குறுந்தகவலாக வந்தது. உடனடியாக நர்கிஸ் பக்ரி தனது கிரெடிட் கார்டை தேடிப்பார்த்தார். அது பைக்குள் பத்திரமாக இருந்தது.
மீண்டும், மீண்டும் பணம் எடுத்தது போல் போனில் தகவல் வந்து கொண்டே இருந்தது. 14 தடவை மொத்தம் ரூ.6 லட்சம் பணம் டாலராக எடுக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த நர்கிஸ் பக்ரி மும்பை போலீசில் புகார் அளித்தார். கிரெடிட் கார்டு தன்னிடம் இருக்கும் நிலையில் அமெரிக்காவில் போலியாக கிரெடிட் கார்டை பயன்படுத்தி டாலரை எடுத்து ரூ.6 லட்சம் மோசடி செய்யப்பட்டு இருப்பதாக புகாரில் அவர் கூறினார்.
இதை தொடர்ந்து உடனடியாக அவரது கிரெடிட் கார்டு முடக்கப்பட்டது. மோசடியில் ஈடுபட்டவர் யார் என்று விசாரணை நடக்கிறது.