இலங்கை முஸ்லிம்களுக்கு அரசியல் அடையாளத்தினை பெற்றுக்கொடுத்த மாபெரும் அரசியல் தலைவர் அஷ்ரப் சஹீதாகி
இலங்கை சுதந்திரம் அடைந்ததற்கு பின்பு இந்நாட்டில் இரண்டு தேசிய இனங்கள் வாழ்கின்றன. என்றே நம்பப்பட்டது. இந்நாட்டின் முழு அதிகாரங்களும் பெரும்பான்மை சிங்களவர்களிடம் இருக்கின்ற நிலையில், பன்னிரண்டு சதவீதமான சிறுபான்மை தமிழர்கள் தங்களது அரசியல் உரிமையை கோரி போராட்டங்களை முன்னெடுத்தார்கள்.
எட்டு சதவீதமாக வாழ்ந்த இன்னுமொரு சிறுபான்மை இனமான முஸ்லிம்கள் ஒரு தனித்துவ சமய, கலாச்சார பாரம்பரியங்களை கொண்ட ஒரு தேசிய இனம் என்ற உண்மை இவ்வுலகத்துக்கு மறைக்கப்பட்டிருந்தது. இந்நாட்டு முஸ்லிம் மக்கள் சிங்கள, தமிழ் கட்சிகளிலும், தமிழீழ ஆயுத இயக்கங்களிலும் இணைந்துகொண்டு அக்கட்சிகளினதும், இயக்கங்களினதும் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு தங்களது தனித்துவ அரசியல் அடையாளத்தினை இழந்தவர்களாக காணப்பட்டார்கள்.
ஆளும் சிங்கள தேசிய கட்சிகளில் அமைச்சர்களாக இருப்பவர்களே முஸ்லிம் மக்களின் தலைவர்கள் என்ற நிலை அப்போது காணப்பட்டது. முஸ்லிம் மக்களுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டபோது தனது இனத்துக்காக குரல் கொடுக்க முடியாதவர்களாக அந்த முஸ்லிம் தலைவர்கள் காணப்பட்டார்கள்.
எம்.எச்.எம். அஷ்ரப், முஹம்மத் ஹுசைன், மதீனா உம்மாஹ் தம்பதியின் புதல்வனாக 1948.10.23 ஆம் திகதி சம்மாந்துறையில் பிறந்தார். இவருக்கு மூன்று சகோதரிகள் உண்டு. தனது இளமைப்பருவத்தில் கல்முனைகுடியில் வளர்ந்தாலும் இவர் அதிகமாக பழகிய ஊர் சாய்ந்தமருதாகும். கம்பளையைச் சேர்ந்த பேரியல் இஸ்மாயில் என்பவரை திருமணம் செய்தார். இவருக்கு அமான் என்னும் ஆண் மகன் உண்டு. திருமணத்துக்கு பின்பு கல்முனை அம்மன் கோவில் வீதியில் தமிழர்களின் எல்லை பிரதேசத்திலேயே வாழ்ந்து வந்தார். தமிழ் – முஸ்லிம் இனக்கலவரம் ஏற்பட்டபோது இவரது வீடு தீக்கிரையாக்கப்பட்டது.
தனது ஆரம்ப கல்வியை கல்முனைக்குடி அல் அஸ்ஹர் வித்தியாலயத்திலும், பின்பு கல்முனை பாத்திமா கல்லூரி, கல்முனை வெஸ்லி உயர் பாடசாலை, மற்றும் கொழும்பு அலெக்ஸ்சாண்டிரியா கல்லூரியிலும் கல்வி பயின்றார். பின்பு சட்டக் கல்லூரிக்கு தெரிவான எம்.எச்.எம். அஷ்ரப் 1975 ஆம் ஆண்டு அரச சட்டத்தரணியாக நியமனம் பெற்றார்.
அடக்கி ஒடுக்கப்பட்ட ஒரு சிறுபான்மை இனம் அரசியல் உரிமையினை பெற்று சுதந்திரக்காற்றை சுவாசிக்க வேண்டும் என்ற அடிப்படை உணர்வினை கொண்டிருந்த சட்டத்தரணி அஷ்ரப் தனது ஆரம்பகால அரசியலை தமிழர் விடுதலை கூட்டணியிலிருந்து ஆரம்பித்தார்.
சட்டத்தரணி அஷ்ரப் நினைத்திருந்தால் சிங்கள தேசிய காட்சிகளில் இணைந்துகொண்டு அவர்களின் சலுகைகளை பெற்று சுகபோக வாழ்வினை மேற்கொண்டிருக்கலாம்.
ஆனால் அடக்கப்பட்டதும், ஒரே தமிழ் மொழியை பேசுகின்ற ஒரு சிறுபான்மை இனத்தினை பிரதிநிதித்துவம் செய்கின்ற கட்சியுடன் சேர்ந்து பயணிப்பதன் மூலம் தமிழர்களுக்கு கிடைக்கின்ற அதே அரசியல் உரிமையினை இன்னுமொரு சிறுபான்மை இனமான முஸ்லிம் மக்களுக்கும் பெற்றுக்கொடுக்க முடியும் என்று நம்பினார்.
தமிழர் விடுதலை கூட்டணியின் உயர்பீட உறுப்பினராக இருந்த சட்டத்தரணி அஷ்ரப் “அண்ணன் அமிர்தலிங்கத்தினால் தமிழ் ஈழத்தினை பெற்றுத்தராவிட்டால் இந்த அஷ்ரப் ஆகிய நான் அதனை பெற்றுத்தருவேன்” என்று மேடை மேடையாக முழங்கினார்.
இந்த நிலையில் 1981 ஆம் ஆண்டு மாவட்டசபை தேர்தல் அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. அந்த தேர்தலில் முஸ்லிம்களுக்காக சில விட்டுக்கொடுப்புக்களை கோரியிருந்தனர். அதாவது முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழும் அம்பாறை மாவட்டத்தில், இந்த மாவட்டசபை தேர்தலுக்கான முதன்மை வேற்பாளராக ஒரு முஸ்லிமை நியமிக்குமாறு முஸ்லிம் ஐக்கிய முன்னணி சார்பாக தமிழர் விடுதலை கூட்டணியிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
ஆனால் அந்த வேண்டுகோள்கள் நிராகரிக்கப்பட்டு முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் அம்பாறை மாவட்டத்தில் தமிழர் ஒருவரே முதன்மை வேட்பாளராக நியமிக்கப்பட்டார். தமிழர் விடுதலை கூட்டணியின் இந்த ஒருதலைபட்ச செயற்பாடு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்களின் நீதியற்ற செயற்பாட்டினால் சட்டத்தரணி அஷ்ரப் விரக்தியடைந்தார்
.
தமிழர் விடுதலை கூட்டணியில் அரசியல் பயணத்தினை மேற்கொண்டாலும் முஸ்லிம்களின் தனித்துவத்தினை எந்த சந்தர்ப்பத்திலும் சட்டத்தரணி அஷ்ரப் விட்டுக்கொடுத்ததில்லை. அன்றைய சில முஸ்லிம் அரசியல் பிரமுகர்களுடன் சேர்ந்து முஸ்லிம் ஐக்கிய முன்னணியில் சட்டத்தரணி அஷ்ரப் அவர்கள் முஸ்லிம்களின் தனித்துவ அரசியலை முன்னெடுக்க முற்பட்டார்.
ஆனால் தன்னுடன் முஸ்லிம் ஐக்கிய முன்னணியில் பயணித்த அனைவரும் சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் சங்கமித்தார்கள். அவர்களது கொள்கைகள் அனைத்தும் பதவிகளுக்காக தடம்புரண்டன.
இந்நிலையிலேயே தனது சமூகத்தின் தனித்துவத்தினை உறுதியாக பேணும் பொருட்டு சட்டத்தரணி எம்.எச்.எம். அஷ்ரப் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்னும் அரசியல் இயக்கத்தினை 1981.09.21 ஆம் திகதி காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள பாலர் பாடசாலை மண்டபத்தில் வைத்து ஆரம்பித்தார்.
இருந்தும் அப்பொழுது இக்கட்சி முஸ்லிம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று இருக்கவில்லை. விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே கூட்டத்துக்கும் சமுகமளித்தார்கள்.
1987 ஆம் ஆண்டு இலங்கை – இந்திய ஒப்பந்தம் மூலம் வடக்கும் கிழக்கும் ஒரேமாகாணமாக இணைக்கப்பட்டபோது, இம்மாகாணங்களில் செறிவாக வாழ்ந்த முஸ்லிம் மக்கள் அரசியல் அனாதையாக்கப்பட்டிருந்தார்கள்.
இந்த சூழ்நிலையிலேயே முஸ்லிம் காங்கிரசின் செயற்பாட்டினை அதன் தலைவர் சட்டத்தரணி எம்.எச்.எம். அஷ்ரப் தீவிரப்படுத்தி 1988.02.11 ஆம் திகதி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசினை ஒரு அரசியல் கட்சியாக தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்தார்.
முஸ்லிம் காங்கிரஸ் வடகிழக்கு மாகாணசபை தேர்தலில் விடுதலை புலிகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தனித்து போட்டியிட்டு 168,038 வாக்குகள் பெற்றதுடன் பதினேழு மாகாணசபை உறுப்பினர்களை முஸ்லிம் காங்கிரஸ் பெற்றிருந்தது.
அதாவது முஸ்லிம் மக்கள் முஸ்லிம் காங்கிரசுக்கு அங்கீகாரமும், ஆணையும் வழங்கியதுடன், சட்டத்தரணி அஷ்ரப் முஸ்லிம்களின் தலைவராக ஏற்றுக்கொண்டார்கள்.
அதன் பிரதிபலிப்பாக பிரதமர் ஆர். பிரேமதாசா தலைவர் அஷ்ரப் அழைத்து ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவளிக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக்கொண்ட தலைவர் அஷ்ரப் பிரேமதாசாவிடம் நிபந்தனை விதித்தார்.
அதாவது அரசியல் யாப்பில் இருக்கும் முஸ்லிம் சமூகத்தினை பாதிக்கின்ற தேர்தல் விகிதாசார முறையில் பன்னிரண்டரை சதவீதமாக இருந்த வெட்டுப்புள்ளியை ஐந்து சதவீதமாக குறைக்க செய்யுமாறு கோரப்பட்டதே அந்த நிபந்தனையாகும். பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு பத்து நாட்களே இருந்த நிலையில் தலைவர் அஷ்ரப்பின் வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஜே.ஆர் தலைமையிலான அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் பாராளுமன்றத்தில் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.
தலைவர் அஷ்ரப் இந்த தீர்க்கதரிசனமான செயற்பாட்டின் மூலம் சிறுபான்மை சமூக கட்சிகள் மட்டுமல்ல, பெரும்பான்மை சமூகத்தின் சிறிய கட்சிகள் கூட பாராளுமன்றம் செல்லக்கூடிய வாய்ப்பு வழங்கப்பட்டது.
1989ஆம் ஆண்டு நடைபெற்ற பொது தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் முதன்முதலாக பொதுத்தேர்தல் ஒன்றில் போட்டியிட்டு நாடு முழுவதிலுமிருந்து 202,016 வாக்குகளை பெற்று நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்று பாராளுமன்றம் சென்றது. தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு முதல்முதலாக பாராளுமன்றம் சென்றார்.
அத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் மூன்று பாராளுமன்ற பிரதிநிதித்துவம் என்ற தலைவர் அஷ்ரப் இலக்கை அடைய முடியாதது ஓர் அதிர்ச்சியான விடயமாகும்.
முஸ்லிம் காங்கிரசின் தோற்றமும், தொடர்ந்து வந்த வடகிழக்கு மாகாணசபை தேர்தல் மற்றும் பொது தேர்தல் மூலமாக முஸ்லிம் மக்களின் ஆணை இக்கட்சிக்கு கிடைத்ததனால் இலங்கையில் பேரம் பேசும் சக்தியுள்ள ஓர் அரசியல் கட்சியாக வளர்ச்சியடைந்ததுடன், அதன் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் ஆளுமையும், திறமையும் பலரையும் திரும்பிப்பார்க்க செய்தது.
இதனால் காழ்ப்புணர்ச்சிகொண்டு சிலர் தலைவர் அஷ்ரப்பை கொலை செய்வதற்கும் முயன்றனர்.
அந்தவகையில் இந்திய படையினருடன் ஓட்டிக்கொண்டு தனது இனத்துக்காக போராடிய சகோதரர்களை காட்டிக்கொடுத்து கொலை செய்துகொண்டிருந்த ஈ.என்.டி.எல்.எப் என்ற தமிழ் ஆயுத குழுவினர் 1989.08.22 அம் திகதி மருதமுனை பிரதேசத்தில் வைத்து தலைவர் அஷ்ரப்பை கொலை செய்வதற்கு துரத்தியபொழுது தலைவர் மயிரிழையில் உயிர் தப்பியிருந்தார்.
1989 ஆம் ஆண்டு தொடக்கம் 1994 ஆம் ஆண்டு வரைக்கும் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்துகொண்டு ஒவ்வொரு பாராளுமன்ற அமர்விலும் முஸ்லிம் மக்களுக்காக தலைவர் அஷ்ரப் துணிச்சலுடன் உரை நிகழ்த்தியிருந்தார். தலைவர் அஷ்ரப்பின் அயராத உழைப்பினால் முஸ்லிம் மக்கள் இந்நாட்டில் ஒரு தனித்துவ தேசிய இனம் என்பதனை உள்நாட்டில் மட்டுமல்ல சர்வதேசமும் அங்கீகரிக்கும் வகையில் தனது செயற்பாட்டினை முன்னெடுத்திருந்தார்.
199௦ ஆம் ஆண்டில் புலிகளுக்கும் பிரேமதாசாவுக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் முறிவடைந்ததன் பின்பு முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களை அழித்தொழிக்கும் பணியில் விடுதலை புலிகள் ஈடுபட்டிருந்தனர்.
பல முக்கிய உறுப்பினர்கள் சுட்டு கொல்லப்பட்டார்கள். தலைவர் அஷ்ரப் புலிகளின் கொலைபட்டியலில் முக்கிய நபராக கொலை அச்சுறுத்தலுக்கு மத்தியில் தனது அரசியலை துணிச்சலுடன் முன்னெடுத்தார்.
தலைவர் அஷ்ரப் தனது தீவிர அரசியல் செயற்பாட்டினை ஆரம்பித்துபல சாதனைகளையும், வரலாற்று தடயங்களையும் ஏற்படுத்தினார். அதேவேளை, தனது அரசியல் பயணத்துக்கு தடையாக இருந்த துரோகிகள் பலரை கட்சியிலிருந்து தூக்கி வீசினார்.
அந்தவகையில், தலைவருடன் ஏற்பட்ட தொடர்ச்சியான கருத்துவேறுபாடு காரணமாக தவிசாளராக இருந்த சேகு இஸ்ஸதீன் முஸ்லிம் காங்கிரசிலிருந்து விலக்கப்பட்டார். இதன் மூலம் கட்சியில் பிளவு ஒன்று ஏற்பட்டு புதிய கட்சி ஒன்று உருவானது. ஆனாலும் அது முஸ்லிம் காங்கிரசினை எந்தவகையிலும் பாதிக்கவில்லை.
1994.07.01 ஆம் திகதி சந்திரிக்காவுடன் தலைவர் அஷ்ரப் ஒப்பந்தம் ஒன்றினை மேற்கொண்டு அவ்வாண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் சந்திரிக்கா தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணியை ஆட்சியில் அமர்த்துவதற்கு தலைவர் அஷ்ரப்ன் பங்களிப்பு பிரதானமானதாகும். அத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் ஏழு பாராளுமன்ற ஆசனங்களை பெற்றுக்கொண்டது.
யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்தும் முஸ்லிம் காங்கிரசுக்கு ஆசனம் கிடைக்கப்பெற்றது. இத்தேர்தலில் ஆட்சியை தீர்மானிக்கும் ஓர் பேரம்பேசும் சக்தியாக தன்னை இவ்வுலகுக்கு நிரூபித்து காட்டினார்.
பத்தாவது பாராளுமன்றத்தில் கப்பல், துறைமுக அபிவிருத்தி, புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சராக பதவி ஏற்று துறைமுக அதிகார சபையிலும், மற்றும் ஏனைய திணைக்களங்களிலும், ஏராளமான இளைஞ்ஞர்களுக்கு தொழில்வாய்ப்பினை வழங்கினார்.
அத்துடன் இந்நாட்டில் முஸ்லிம்களுக்கென்று ஒரு பல்கலைக்கழகம் இல்லாத நிலையினை உணர்ந்த தலைவர் முஸ்லிம்களின் உயர்கல்வியினை அபிவிருத்தி செய்யும்பொருட்டு 1995.10.23 ஆம் திகதி ஒலுவில் பிரதேசத்தில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தினை உருவாக்கினார்.
பல எதிர்ப்புக்களுக்கு மத்தியில் முஸ்லிம்களுக்காக உயர் கல்விக்கென்று ஒரு நிறுவனம் உருவாக்கப்பட்டதானது நினைத்துகூட பார்க்கமுடியாத ஒரு வரலாற்று சாதனையாகும்.
அத்துடன் ஒலுவில் பிரதேசத்தில் துறைமுகம் ஒன்றினையும் அபிவிருத்தி செய்தார்.
இனப்பிரச்சினை தீர்வின்போது முஸ்லிம்களுக்கென்று உருவாக்கப்பட இருக்கின்ற தென்கிழக்கு அலகு என்னும் முஸ்லிம் சுய ஆட்சி பிரதேசத்தில் ஒரு தனி இராச்சியத்துக்குரிய அனைத்து அம்சங்களும் அமைந்து இருக்க வேண்டும் என்று விரும்பினார். அதுவே அவரது கனவாகவும் இருந்தது.
தலைவர் அஷ்ரப் ஒரு சிறந்த அரசியல் வாதியாக மட்டுமல்லாது, சிறந்த சட்டத்தரணியாகவும், சிறந்த கவிஞனாகவும் தன்னை அடையாளப்படுத்தி இருந்தார். அவர் எழுதிய கவிதை தொகுப்பான “நான் எனும் நீ” என்ற கவிதை நூல் 1999.09.26 ஆம் திகதி வெளியிடப்பட்டு சிறந்த வரவேற்பினை பெற்றிருந்தது.
சந்திரிக்கா இரண்டாவது ஜனாதிபதி தேர்தலை எதிர்கொண்ட வேளையில் அவரது ஆட்சியில் தலைவர் அஷ்ரப் அவருக்கு ஏற்பட்ட கசப்புணர்வுகள் கடிதம் மூலமாக பரிமாறப்பட்டு, இறுதியில் ஜனாதிபதி சந்திரிக்கா தலைவர் அஷ்ரப்பிடம் மன்னிப்பு கோரியிருந்தார்.
அதனை தொடர்ந்து தலைவர் அஷ்ரப்பின் தயவுடன் மீண்டும் சந்திரிக்கா 1999 ஆம் ஆண்டு ஜனாதிபதியானார்.
அதன் பின்பு 2000 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்காக மீண்டும் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணியுடன் இணைந்து முஸ்லிம் காங்கிரஸ் தேர்தலில் போட்டியிட்டது.
இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபடும்பொருட்டு 16. ௦9. 2௦௦௦ அன்று வானூர்தி மூலம் அம்பாறையை நோக்கி தலைவர் அஷ்ரப் வந்துகொண்டிருந்தபோது யாரும் எதிர்பாராத விதமாக வானூர்தி வெடித்து சிதறியதன் மூலம் சஹீதானார்.
இவரது மரணம் திட்டமிட்ட கொலையா அல்லது விபத்தா என்று இதுவரையில் குழப்பமான நிலை இருந்து கொண்டிருக்கின்றது.
அம்பாறை மாவட்டத்தில் மூன்று பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை பெறும்பொருட்டு, அதற்கான வியூகத்தினை வகுத்திருந்த தலைவர் அஷ்ரப் அந்த இலக்கினையும் தாண்டி நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றிருந்தது ஒரு வரலாற்று சாதனையாகும். ஆனால் அந்த வரலாற்று சாதனையை பார்ப்பதற்கு தலைவர் அஷ்ரப் உயிருடன் இருக்கவில்லை.
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் உலகம் அழியும்வரைக்கும் மாமனிதர், மர்ஹூம் அஷ்ரப் தனித்துவ ஆளுமையும், அவரது சாதனைகளும் என்றென்றும் பேசப்பட்டுக்கொண்டே இருக்கும். அவரது இழப்பு இந்நாட்டு முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.