இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவியை கலாநிதி சோமரத்ன திஸாநாயக்க ராஜினாமா செய்துள்ளார்.
தனிப்பட்ட மற்றும் தற்போது காணப்படும் சில அரசியல் விடயங்களின் அடிப்படையில் தான் தலைவர் பதவியில் இருந்து விலக தீர்மானித்ததாக சோமரத்ன திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் திங்கட் கிழமை முதல் தனது ராஜினாமா நடைமுறைக்கு வரும் எனவும் அவர் கூறியுள்ளார்.
பிரபல திரைப்பட இயக்குனரான சோமரத்ன திஸாநாயக்க, கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக செயற்பட்டு வந்தார்.
அவருடன் ஏற்பட்ட அரசியல் முரண்பாடுகள் காரணமாக திஸாநாயக்க, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கினார்.
இதனையடுத்து மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் சோமரத்ன திஸாநாயக்க, இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.