இளைஞர்களை உள்ளடக்கி உருவானது புதியதோர் அரசியல் கட்சி

115

 

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு இளைஞர்களை உள்ளடக்கி இராசையா விக்டர்ராஜ் தலைமையில் அகில இலங்கை இளைஞர் முன்னணி என்ற கட்சி உருவாக்கப்பட்டுள்ளது. குறித்த கட்சியினால் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தூய்மையான அரசியல், நேர்மையான செயல்பாடுகள், தற்சார்பு பொருளாதாரம், என்பவற்றை அக் கட்சியின் குறிக்கோளாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு அபிவிருத்தி இல்லாத உரிமையும், உரிமை இல்லாத அபிவிருத்தியும் பயனளிக்காது என்றும் மத்தியில் உள்ள அரசாங்கம் எதுவானாலும் ஒரு இணக்கத்தை ஏற்படுத்தி எமது மக்களுக்கான தேவையை நிறைவேற்றுவதற்கும் எமது கட்சி உரிய ஆக்கபூர்வமான பேச்சு வார்த்தைகளிலும் ஈடுபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் சின்னமாக ஒன்றிணைந்து உயர்ந்த கைகளும் கொடியின் நிறத்தில் வெள்ளை தூய்மையான அரசியலையும் நீலம் நேர்மையான அரசியல் செயற்பாட்டையும் பச்சை தற்சார்பு பொருளாதார கொள்கையையும் பிரதிபலிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து இளைஞர் யுவதிகள், மாற்றத்தை விரும்பும் மக்கள், மட்டுமல்லாது கிழட்டு அரசியல் செய்யும் தலைமைகள் இனியாவது விலகி இளம் தலைமுறையினருக்கு ஆதரவளிக்குமாறும் இளம் சமுதாயமே நாளைய தலைமைத்துவம் ஏற்க அணி திரளுமாறும் அகில இலங்கை இளைஞர் முன்னணி கேட்டுக் கொள்கிறது.

தமது கட்சியில் குற்றப்பின்னணி உள்ளவர்களையோ, ஊழல்வாதிகளையோ இணைத்துக் கொள்ள மாட்டோம் எனவும் தவறு செய்பவர்கள் கட்சி தலைமையானாலும் வெளியேற்றக்கூடிய இறுக்கமான அரசியல் யாப்பு உருவாக்கப்படும் எனவும் கட்சி தெரிவித்துள்ளது.

இக் கட்சியில் இளைஞர்கள் அதிகளவில் உள்ளபடியால் ஆக்கபூர்வமான அரசியல் கலாச்சாரமும் ஒரு புதிய அரசியல் புரட்சியும் தமிழர் பிரதேசங்களில் ஏற்படும் எனவும் அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

SHARE