கிளிநொச்சி கடற்றொழிலாளர்களுக்கும் இழுவைப்படகு தொழில் மேற்கொள்வதற்கு அனுமதி தாருங்கள் அல்லது சவப்பெட்டிகளை தாருங்கள் என கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் இணைத் தலைவர்களை நோக்கி, கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாச தலைவர் ஜோசப் பிரான்சிஸ் தெரிவித்தார்.
நேற்று 26-09-2016 கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட கடற்றொழிலாளர்கள் தொடர்ந்தும் உள்ளூர் அதாவது யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் இழுவைப் படகுகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணத்திலிருந்தும் மன்னாரிலிருந்தும் பூநகரியில் நாம் தொழில் செய்யும் கடற்கரைக்கு வரும் இழுவைப் படகுகளால் எங்களது பெறுமதிவாய்ந்த கடற்றொழில் உபகரணங்கள் அழிக்கப்பட்டும் சேதமாக்கப்பட்டும் வருகிறது.
இது தொடர்பில் நாங்கள் பல தடவைகள் பலருக்கும் தெரியப்படுத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சுமார் ஆயிரத்து ஆறுநூறு பேர் தொழில் செய்கின்ற இழுவை படகுகளை பற்றி கவனத்தில் எடுக்கின்ற நீங்கள், அறுபதாயிரம் சாதாரண கடற்றொழிலாளர்களை பற்றி அக்கறை எடுக்கவில்லை.
நாங்கள் ஏழை கடற்றொழிலாளர்கள். இழுவை படகு தொழிலாளர்கள் போன்று கொழும்பு வரை சென்று எதிர்ப்புத் தெரிவிக்க இயலாது.
உயர்ந்த பட்சம் இவ்வாறான கூட்டங்களில் மாத்திரமே எங்களது உணர்வை வெளிப்படுத்த முடியும் எனவும் தெரிவித்த அவர்,
இந்திய இழுவைப் படகுகளாலும் நாம் தொடர்ந்தும் பாதிக்கப்படுகின்றோம், ஆனாலும் இந்திய இழுவைப் படகு கடற்றொழிலாளார்கள் கைது செய்யப்படுகின்றார்.
ஆனால் எமது உள்ளூர் இழுவைப் படகுகளை உரிய தரப்புக்கள் எவரும் கட்டுப்படுத்துகின்றார்கள் இல்லை.
எனவே இனியும் எங்களால் பொறுத்திருக்க முடியாது. உங்களால் உள்ளூர் இழுவைப் படகுகளை கட்டுப்படுத்த முடியாது என்றால் எங்களுக்கும் இழவைப் படகு தொழில் மேற்கொள்வதற்கு அனுமதி தாருங்கள் அல்லது எங்கள் கடற்றொழிலாளர்களுக்கு சவப்பெட்டிகளை தாருங்கள் என விசனத்துடன் தெரிவித்தார்.
இதன் போது இணைத் தலைவா்களான வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன் மற்றும் அங்கஜன் இராமநாதன் மற்றும் மாவை சேனாதிராஜா, வட மாகாண அமைச்சர்களான டெனீஸ்வரன், ஜங்கரநேசன், சத்தியலிங்கம், குருகுலராஜா மாகாண சபை உறுப்பினர்களான தவநாதன், அரியரட்னம் மற்றும் திணைக்களங்களின் தமைலவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.