பயங்கரவாதத்திற்கு ஆதரவாக செயற்படுவதாக கூறி, ஈரானின் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்பு படையை அமெரிக்கா பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது.
பிற நாட்டு அரசு படையை பயங்கரவாத இயக்கமாக அமெரிக்கா அறிவிப்பது இதுதான் முதல் முறையாகும்.
இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவிக்கையில்,
ஈரானுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளோம்.
அத்துடன் ஈரானின் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்புப் படையுடன் உலகின் எந்த வங்கிகளும், நிறுவனங்களும் தொடர்பு வைத்து கொள்ளக் கூடாது. அவ்வாறு தொடர்பு வைத்திருப்பது தெரிந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
இதேவேளை ஈரானின் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்புப் படை பயங்கரவாத செயலில் ஈடுபட்டுள்ளது, பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்கிறது, பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது என்ற உண்மை, இந்த நடவடிக்கையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.