மனிதனின் ஒவ்வொரு செயற்பாடுகளிலும் ஒன்றிற்கு மேற்பட்ட அங்கங்கள் அவசியம் பங்கு வகிக்கும்.அவற்றிலும் நிற்றல், ஓடுதல், நடத்தல் என பல செயற்பாடுகளிலும் முழங்காலின் அசைவு இன்றியமையாததாகும்.
இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த முழங்கால்களை நமக்கு தெரியாமலே நமது செயற்பாடுகளால் காயப்பட வைத்து விடுகின்றோம். இதில் பெரும்பாலும் உட்கார்ந்திருக்கும்போதே முழங்கால் காயமடைதலுக்கு உட்படுகின்றது. அதாவது சம காலத்தில் அதிகளவானர்கள் ஆரோக்கியத்தை மறந்து ஆடம்பரத்திற்காக பல்வேறு வடிவமைப்புக்களைக் கொண்ட கதிரைகளைப் பயன்படுத்துவதுடன் அவற்றினை சரியான உயரத்தில் பேணுவதில்லை. நாம் உட்காரும்போது எமது முழங்கால்களை விடவும் இடுப்பு சற்று உயர்ந்து காணப்படும் வகையில் உட்காரும்போதே முழங்காலுக்கு ஓய்வு கிடைப்பதுடன் அது காயமடைவதிலிருந்து பாதுகாக்கப்படுகின்றது. அடுத்ததாக முழங்கால்களில் சிறு காயம் அல்லது வலி ஏற்பட்டிருக்கும்போது தொடர்ச்சியாக நடைப் பயிற்சியில் ஈடுபடுதலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். இது தவிர நடைப் பயிற்சிகளை மேற்கொள்ளும்போது உடலின் எடையினை பாதங்கள் தாங்கிக்கொள்ளுமாறு பார்க்க வேண்டும். அவ்வாறில்லாமல் முழங்கால்களில் உடல் சுமையினை தாங்க முற்படின் அவை காயமடைதலுக்கு உள்ளாவதை தவிர்க்க முடியாது. இவற்றிலும் மேலாக உணவு உள்ளெடுத்தலின்போது தேவையான அளவு கல்சியத்தினை சேர்த்துக்கொள்ளுதல், பாதங்களுக்கு ஏற்றவாறான பாதணிகளை பயன்படுத்துவதன் ஊடாகவும் முழங்கால்களை காயப்படுத்துவதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும். |