உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நயினாதீவுக்கு பயணம்! கவனிப்பார்களா அதிகாரிகள்?

305

நயினாதீவுக்கு செல்லும் பயணிகள் படகுகள் அனைத்தும் பழுதடைந்த நிலையில் இருப்பதால் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பயணிக்க நேர்ந்துள்ளதாக பயணிகள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவுற்றதன் பின்னர் யாழ்ப்பாணத்திற்கு வரும் தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள் நயினாதீவு படகுப்பயணத்தில் கடும் ஆர்வம் காட்டுகின்றனர்.

இதன் காரணமாக இந்த வழித்தடத்தில் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படும் படகுகளுக்கு கணிசமான வருமானம் கிடைத்து வருகின்றது.

எனினும் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படும் பல படகுகளில் ஓட்டை விழுந்து, ஆபத்தான நிலையில் காணப்படுவதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக நயினாதீவுக்கு செல்லும் பயணிகள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டே பயணிக்க வேண்டியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும் பயணிகளுக்கு வழங்கப்படும் உயிர்காக்கும் கவசங்களும் சேதமுற்ற நிலையில் காணப்படுவதுடன், ஆபத்து நேரத்தில் அவற்றைப் பயன்படுத்தி உயிரைப் பாதுகாத்துக் கொள்வது நடவாத காரியம் என்றும் பயணிகள் தொடர்ந்தும் தெரிவித்துள்ளனர்.

பாரிய அனர்த்தம் ஒன்று நடப்பதற்கு முன்னராக இது குறித்து அதிகாரிகள் உடனடிக் கவனம் செலுத்தி, புதிய படகுகளை போக்குவரத்தில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

SHARE