உலகம் முழுவதும் 13 கோடி பேர் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து பரிதவித்து வருகின்றனர். அவர்களுக்கு தாராளமாக உதவி செய்ய வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூன் அழைப்பு விடுத்துள்ளார்.
உலக மனிதாபிமான தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19ம் திகதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நியூயார்க்கில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூன் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:
உலகம் முழுவதும் சுமார் 13 கோடி மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து பரிதவித்து வருகின்றனர். அவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவது நமது கடமை.
போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் வாழும் மக்கள் புகலிடம் தேடி ஆபத்தான கடல் வழி பயணத்தை மேற்கொள்கின்றனர். பல்வேறு நாடுகளில் போர்முனையில் சிக்கித் தவிக்கும் லட்சக்கணக்கான மக்கள் உணவும் மருந்து பொருட்களும் கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர்.
மனிதாபிமானத்தின் பெயரில் உலக மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். போர், வறட்சி, வறுமை, முதுமை, நோய், இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டுள்ள நமது சகோதர, சகோதரிகளில் யாரையும் கைவிடக்கூடாது. அவர்களை அரவணைத்து அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கூறினார்.