
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இன்று உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களை சந்திக்க உள்ளனர்.
மேல் மாகாண உள்ளுராட்சி மன்றங்களின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதிநிதிகளை சந்திக்க உள்ளனர்.
ஜனாதிபதியின் சந்திப்பு இன்று காலை 9.00 மணிக்கு நாடாளுமன்றில் நடைபெறவுள்ளது.
இந்த சந்திப்பில் பங்கேற்குமாறு உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு கட்சியின் தலைமையகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சந்திப்புக்கள் களுத்துறை, கம்பஹா மற்றும் கொழும்பில் நடைபெறவுள்ளது.
முற்பகல் 10.00 மணிக்கு களுத்துறையிலும், பிற்பகல் 2.00 மணிக்கு கம்பஹாவிலும், மாலை 5.00 மணிக்கு கொழும்பிலும் இந்த சந்திப்புக்கள் நடத்தப்பட உள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு தெரிவாகியுள்ள உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்க உள்ளதாக மொரட்டுவை நகரசபையின் நகரபிதா சமன் லால் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ச 58 லட்சம் வாக்குகளைப் பெற்றுக் கொண்டதாகவும் இதில் 20 லட்சம் வாக்குகள் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளின் ஒத்துழைப்பு காரணமாக கிடைக்கப் பெற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஒத்துழைப்பிற்கு நன்றி பாராட்டும் நோக்கில் மஹிந்த ராஜபக்ச உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளை சந்திக்க உள்ளதாக சமன் லால் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தற்போதைய தலைவர் மைத்திரிபால சிறிசேனவிற்கும், முன்னாள் தலைவர் மஹிந்தவிற்கும் இடையிலான பலப்பரீட்சையாக இந்த சந்திப்புக்கள் கருதப்படுகின்றது.
இருவரும் ஒரே நாளில் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளை சந்திக்க தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.