ஊடகங்களின் கருத்துக்களுக்கு அடிபணியப் போவதில்லை; அனந்தி

290

ஊடகங்கள் வெளியிடும் கருத்துக்களுக்கு தான் அடிபணியப் போவதில்லை என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பெண்ணாக தான் அரசியலுக்கு விரும்பி வரவில்லை என்றும் வரவேண்டிய நிர்ப்பந்தத்தினாலே அரசியலுக்கு வந்ததாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

ஊடக தர்மம் இல்லாமல் எழுதுகின்ற ஊடக எழுத்துக்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பணம் சம்பாதிக்கும் நோக்கில் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஜெனீவாவுக்கு செல்வதாக சில ஊடகங்கள் எழுதுவதாகவும், இதுதொடர்பாக இன்று யாழ். ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மிகவும் சிரமத்திற்கு மத்தியிலே தான் ஜெனீவாவிற்கு செல்வதாகவும் தேர்தல் காலத்தில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையிலே தான் ஐக்கிய நாடுகள் சபைக்கு தொடர்ந்தும் பயணிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தங்களுடைய சுயநல இலாபத்திற்காக தங்களை வைத்து பிழைக்க வேண்டாம் எனக் குறிப்பிட்ட அனந்தி சசிதரன், அரசியல் என்பது மோசமான மன உளைச்சலை தனக்கு கொடுத்துள்ளதாகவும் கவலை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, தமிழ் மக்கள் பேரவை பெண்களுக்கான அங்கீகாரத்தை வழங்கவில்லை என்று கூறியதே தவிர, தனிப்பட்ட எந்தவொரு கருத்தையும் தான் கூறவில்லை என்றும் அனந்தி சசிதரன் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையில் பெண்களுக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று கூறிய கருத்து மெருகூட்டப்பட்டு, தங்களுடைய கருத்துக்களாக எழுதியுள்ளார்கள் என்றும் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணாக தன்னை ஒரு பலிக்கடாவாக்க நினைப்பது ஒரு ஊடக தர்மம் இல்லை என்றும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

SHARE