ஊடகவியலாளரின் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

368

நீதமன்ற-அவமதிப்பு

அவுஸ்திரேலியாவில் இருந்து 2016 ஜனவரி மாதம் 20ஆம் திகதி நாடு திரும்பிய மட்டக்களப்பைச் சேர்ந்த சுயாதீன தமிழ் ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சசிகரன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்தின் அடிப்படையில் மீண்டும் 6 மாதங்களுக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புண்ணியமூர்த்தி சசிகரனுடைய வழக்கு விசாரணை நேற்று செவ்வாய்க்கிழமை நீர்கொழும்பு நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், அவ்வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 21ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், மாதம் ஒரு முறை கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவிற்குச் சென்று கையொப்பமிடத் தேவையில்லை என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதவான் சேனக பெரேரா இந்த உத்தரவினைப் பிறப்பித்தார்.

2011ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் சென்றிருந்த ஒரு குழந்தையின் தந்தையான மட்டக்களப்பு மாமாங்கம் பிரதேசத்தைச் சேர்ந்த பு.சசிகரன் அவுஸ்திரேலியாவில் 5 வருடங்கள் தனது பாதுகாப்பு காரணமாக அங்கு வசித்து வந்துள்ளார்.

இலங்கையில் புதிய ஆட்சி மாற்றத்தின் பின் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய ஜனாதிபதி சொந்த நாட்டில் இருந்து இடம்பெயர்ந்த அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் போன்றவர்களுக்கு நாட்டுக்கு வந்து தங்களது சேவைகளை செய்யும்படி அழைப்பு விடுத்திருந்தார்.

ஜனாதிபதியின் அழைப்புக்கு செவி சாய்த்து ஒரு நம்பிக்கையின் பிரகாரம் புண்ணியமூர்த்தி சசிகரன் இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.

ஜனவரி மாதம் 20ஆம் திகதி இலங்கை விமான நிலையம் வந்தடைந்த புண்ணிய மூர்த்தி சசிகரன் இலங்கை குடிவரவு திணைக்களத்தால் விசாரிக்கப்பட்டு இலங்கை குற்றப்புலனாய்வு துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.

இலங்கை குற்றப் புலனாய்வு துறையினரின் அனைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட புண்ணியமூர்த்தி சசிகரன் 28 மணித்தியாலங்கள் விமானநிலைய பாதுகாப்பில் வைக்கப்பட்டு பின் நீர்கொழும்பு நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லப்பட்டு நிபந்தனை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

5 வருடங்கள் கடவுச்சீட்டு தடை செய்யப்பட்டுள்ளதுடன் ஒவ்வொரு மாதம் வருகின்ற இறுதி ஞாயிற்றுகிழமையும் கொழும்பிலுள்ள குற்ற புலனாய்வு துறை காரியாலயத்தில் கையொப்பம் இடும் படியும் தீர்ப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார் .

advertisement
SHARE