ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானியிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
லசந்த கொலை மற்றும் ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரி சிசிர மென்டிஸிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
குற்ற விசாரணைப் பிரிவினர் அண்மையில் ஆறு மணித்தியாலங்கள் சிசிரவிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
லசந்த கொலை மற்றும் கீத் நொயார் கடத்தல் சம்பவங்களின் போது சிசிர மென்டிஸ் குற்ற விசாரணை பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையாற்றியிருந்தார்.
பொலிஸ் திணைக்களத்திலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டதன் பின்னர் தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் சிசிர மென்டிஸ், தேசியப் புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரியாக கடமையாற்றி வருகின்றார்.
இந்த விசாரணைகளின் மூலம், லசந்த கொலை மற்றும் கீத் நொயார் கடத்தல் தொடர்பில் மிக முக்கியமான தகவல்களை பெற்றுக்கொள்ள முடிந்தது என பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.