எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான அடுத்த பிரேரணை? – தயாராகிறது ஜெனிவா

271

 

எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடரில் ஒருசில உறுப்பு நாடுகள் இணைந்து இலங்கை தொடர்பாக மற்றுமொரு பிரேரணையை தாக்கல் செய்யும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவை தவிர்த்து ஐரோப்பிய நாடுகள் இந்த முயற்சியில் ஈடுபடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் 34 ஆவது கூட்டத் தொடரில் ஏற்படவுள்ள நிலைமைகளை சமாளிக்கும் வகையில் அரசாங்கம் தற்போதிருந்தே எதிர்கொள்ளும் திட்டங்களை வகுத்துவருகின்ற நிலையில் அரசாங்க தரப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளும் மார்ச் மாதம் ஜெனிவாவில் முகாமிடுவதற்கு தயாராகி வருகின்றனர்.

விசேடமாக 34 ஆவது அமர்வில் இலங்கை தொடர்பாக பிரேரணைகள் கொண்டுவரப்படாமல் தடுக்கும் நோக்கில் அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் காய்களை நகர்த்தவுள்ள நிலையில் தமிழர் தரப்பு பிரதிநிதிகள் ஜெனிவா பிரேரணை அமுலாக்கம் குறித்து வலியுறுத்தவுள்ளனர்.

எவ்வாறெனினும் கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான ஜெனிவா பிரேரணையின் அமுலாக்கம் குறித்த இறுதி எழுத்துமூல அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் சமர்ப்பிக்கவுள்ளார். அந்த எழுத்துமூல அறிக்கையானது பிரேரணையாக முன்வைக்கப்படும் சாத்தியம் உள்ளதாகவே தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை அடுத்தவருடம் பெப்ரவரி மாதமாகும்போது நான்கு பிரதான அம்சங்களைக்கொண்ட உள்ளக விசாரணை பொறிமுறையின் வடிவத்தை தயாரித்துவிடுவதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. அதாவது காணாமல் போனோர் குறித்த அலுவலகம் உண்மையை கண்டறியும் ஆணைக்குழு நட்டஈடு வழங்கல் மீள்நிகழாமையை உறுதிபடுத்தல் ஆகிய நான்கு அம்சங்களை பிரதானமாகக்கொண்டே அரசாங்கம் உள்ளக விசாரணை பொறிமுறையை தயாரித்துவருகின்றது.

அடுத்தவருடம் பெப்ரவரி மாதமாகும்போது உள்ளக விசாரணை பொறிமுறையின் இறுதி வடிவம் தயாரிக்கப்பட்டுவிடும் என்றும் அதன் பின்னர் சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளக விசாரணை பொறிமுறை தொடர்பான வரைபு ஜெனிவா மனித உரிமை பேரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் மாதம் நடுப்பகுதியில் விசாரணை பொறிமுறையின் இறுதி வடிவத்தை தயாரிக்கும் பணிகளை அரசாங்கம்ஆரம்பித்து பெப்ரவரி் மாதமாகும்போது இறுதி வடிவத்தை தயாரித்துவிடும் என்று எதிர்பார்க்கின்றது.

அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் விசாரணை பொறிமுறையின் முதலாவது கட்டமாக காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் அமைக்கப்படவுள்ளது. அதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் விரைவில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு நிறுவப்படவுள்ளது. அடுத்ததாக மனித உரிமை மீறல்கள், மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்கும் செயற்பாடும் இடம்பெறவுள்ளது. மேலும் மீள்நிகழாமை தொடர்பான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவுள்ளன. இறுதியாக புதிய அரசியலமைப்பை உருவாக்கி அதனூடாக சிறுபான்மை மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக் காண உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பல்வேறு மட்டங்களில் விசாரணை பொறிமுறை முன்னெடுக்ககப்படவுள்ளது. கடந்த வருடம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைவாகவே பொறுப்புக்கூறல் பொறிமுறை முன்னெடுக்கப்படவுள்ளது. அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 33 ஆவது கூட்டத் தொடரில் பிரேரணை அமுலாக்கம் தொடர்பான வாய்மூல அறிக்கையை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் சமர்ப்பித்திருந்தார்.

SHARE