காணாமல் போனோர் தொடர்பாக விசாரணைகளை நடத்தும் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் இன்று வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு சாட்சியமளித்தார்.
அவர் தனது சாட்சியத்தில் தெரிவிக்கையில்,
நாங்கள் முல்லைக்குளம், கல்மடுவில் வசிக்கின்றோம். கடந்த 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் 08ம் திகதி எனது கணவர் எமது பகுதியில் வசிக்கும் ஒருவருடன் வீட்டில் இருந்து மோட்டர் சைக்கிளில் வவுனியா நகரத்திற்கு சென்றார்.
காலையில் சென்றவர் 11.30 மணியளவில் வங்கியில் பணத்தை வைப்புச் செய்து விட்டு திரும்பி வந்து கொண்டிருந்த போது ஈச்சங்குளத்திற்கும் – கல்மடுவிற்கும் இடையில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ காவலரண்கள் இரண்டின் அருகே வீதி தடை போடப்பட்டு மக்கள் அவ்வீதியால் செல்ல விடாமல் தடுக்கப்பட்டது.
இதன்போது அந்த இராணுவக் காவலரண் இரண்டும் அமைந்துள்ள பகுதிக்குள் வைத்து எனது கணவன் பேரின்பராஜா (வயது 34) மற்றும் அவருடன் சென்ற உதயகுமார் ஆகிய இருவரையும் 57வது படைப்பிரிவு இராணுவத்தினர் மோட்டர் சைக்கிளில் இருந்து இறக்கி வெள்ளை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.
இதன்போது அவ்விடத்திற்கு அருகில் இருந்த எனது சகோதரி வீட்டில் இருந்த நான் எனது கணவனை கடத்தும் போது கண்ணால் கண்டேன். அந்த இராணுவத்தை இப்பொழுதும் என்னால் அடையாளம் காட்ட முடியும். நான் கணவன் நின்ற இடத்திற்கு செல்ல முற்பட்ட போது காவலரணில் இருந்த இராணுவம் என்னை செல்லவிடவில்லை. ஒரு காவலரணில் ஜெயவர்த்தன என்ற இராணுவ வீரர் இருந்தார். அவருக்கும் கடத்திய இராணுவத்தினரை தெரியும்.
அதன்பின் நான் இராணுவத்திடம் கேட்ட போது தாம் கடத்தவில்லை எனக் கூறிவிட்டார்கள். அதன்பின் பொலிஸ் நிலையம், மனித உரிமை ஆணைக்குழு, இராணுவ முகாம் என எனது மூன்று பெண் பிள்ளைகளுடனும் ஏறி இறங்கி வருகின்றேன். இறுதியாக உங்களிடம் வந்துள்ளேன் என கண்ணீர் மல்க சாட்சியமளித்தார்.