எனது மகனை கொலையாளியாக்க நான் விரும்புவேனா என்று மரணதண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் டி.ஜ.ஜி. வாஸ் குணவர்தன எதிராளிக் கூண்டில் நின்றவாறே நீதிபதிகளிடம் கேள்வி கேட்டிருக்கிறார்.
பம்பலப்பிட்டி கோடீஸ்வரர் மொஹமட் சியாமின் கொலை வழக்கில் முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன, அவரது மகன் ரவீந்து குணவர்தன உட்பட அறுவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கியபோது எதிராளிக் கூண்டில் நின்ற வாஸ் குணவர்தன நீதிபதிகளைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார். இலங்கையில் புலனாய்வுப் பொலிஸார் அப்பாவிகள் மீது குற்றம் சுமத்தி அவர்களுக்குத் தண்டனை வாங்கிக்கொடுப்பதையே தமது பணியாகக்கொண்டு செயற்பட்டு வருகிறார்கள். இன்று எங்களுக்கு நடந்துள்ள இந்த அநீதி எதிர்காலத்தில் எவருக்குமே நடக்கக்கூடாது என்பதைத் தெரிவிக்கவே இதை நான் இந்த நீதிமன்றத்தில் கூறுகின்றேன் என்று வாஸ் குணவர்தன மேலும் கூறினார். மரணதண்டனைத் தீர்ப்பு வாசிக்கப்படுவதற்கு முன் எதிராளி எதையாவது கூற விரும்புகிறாரா என்று கேட்பது நீதிமன்றங்களின் சம்பிரதாயமாகும். அவ்வாறு கேள்வி எழுப்பப்பட்டபோதே வாஸ் குணவர்தன தனது ஆதங்கத்தை இவ்வாறு வெளிப்படுத்தினார். அவரையடுத்து அவரது மகன் ரவீந்து குணவர்தனவிடம் அந்த சம்பிரதாயக் கேள்வி கேட்கப்பட்டபோது அவர் இப்பேர்ப்பட்ட தந்தையொருவருக்கு மகனாகப் பிறந்ததையிட்டு தான் பெருமைப்படுவதாகக் கூறினார். இவர்கள் இருவரும் அவர்களுடன் மரணதண்டனை விதிக்கப்பட்ட நால்வரும் குறிப்பிட்ட கொலைச்சம்பவத்துக்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும், தாங்கள் முற்றிலும் நிரபராதிகள் எனவும் நீதிபதிகளின் முன்னிலையில் தெரிவித்தனர்