எம்பிலிப்பிட்டி இளைஞர் மரணச் சம்பவம் தொடர்பில் துணைப் பொலிஸ் அத்தியட்சகர் மட்டுமே இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளார் என சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 21 உத்தியோகத்தர்களை கைது செய்யுமாறு எம்பிலிப்பிட்டி நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
எனினும், உத்தரவிடப்பட்டு 18 நாட்கள் கடந்துள்ள நிலையிலும் துணைப் பொலிஸ் அத்தியட்சகர் மட்டுமே கைதாகியுள்ளார்.
ஏனையவர்களிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்களை அழைத்து புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தி வாக்கு மூலங்களை பதிவு செய்து வருகின்றனர்.
சில பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக சாட்சியாளர்கள் வழங்கிய சாட்சியங்கள் தொடர்பில் முழு அளவில் விசாரணை நடத்தி முடிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.